மும்பை : ரோஹித் சர்மா கேப்டனாக இதுவரை செய்யாத ஒரு விஷயத்தை செய்து இருக்கிறார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இளம் இந்திய வீரர்களை புகழ்ந்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். ஒரு கேப்டனாக வேறு எந்த இந்திய வீரரையும் அவர் இப்படி தனிப்பட்ட முறையில் பாராட்டியது இல்லை.
ஆனால், இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இளம் வீரர்கள் யாஷஸ்வி ஜெய்ஸ்வால், சர்ஃபராஸ் கான் மற்றும் விக்கெட் கீப்பர் துருவ் ஜுரேல் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர்.

சர்ஃபராஸ் கான் சிறப்பாக செயல்பட்டு இரண்டு இன்னிங்ஸ்களிலும் அரைசதம் அடித்தார். ஜெய்ஸ்வால் இரண்டாவது இன்னிங்ஸில் இரட்டை சதம் அடித்து இந்திய அணி 556 ரன்கள் முன்னிலை பெற முக்கிய காரணமாக இருந்தார். துருவ் ஜுரேல் இரண்டாவது இன்னிங்ஸில் ஆபத்தான இங்கிலாந்து வீரர் பென் டக்கெட்டை ரன் அவுட் செய்தார். சர்ஃபராஸ் கான் மற்றும் துருவ் ஜுரேல்-க்கு இதுதான் அறிமுக டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
இதை அடுத்து ரோஹித் சர்மா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் சர்ஃபராஸ் கான் மற்றும் ஜெய்ஸ்வால் பேட்டிங் செய்த புகைப்படம் மற்றும் துருவ் ஜுரேல் ரன் அவுட் செய்த புகைப்படம் ஆகியவற்றை பகிர்ந்து அதன் கீழ், "இந்த காலத்தில் சின்ன பசங்க...." என்று ஹிந்தியில் குறிப்பிட்டு இருக்கிறார். அதாவது, "இந்த காலத்தில் சிறுவர்கள் என்னென்ன செய்கிறார்கள் பாருங்கள்" என்று சுருக்கமாக அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
போட்டி முடிந்த உடன் ஜெய்ஸ்வால் பற்றி அதிகம் பேச மாட்டேன் என்று கூறிய ரோஹித் சர்மா அவரையும் சேர்த்து பாராட்டி இருக்கிறார். ஒரு கேப்டன் போட்டி முடிந்து ஒரு நாள் கழித்து தங்களை பற்றி பாராட்டி இருப்பது அந்த இளம் வீரர்களுக்கு பெரிய ஊக்கமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இவர்களே இந்திய டெஸ்ட் அணியின் எதிர்காலமாகவும் பார்க்கப்படுகிறார்கள்.