ராஜ்கோட் : இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில் சொதப்பினார். அவர் டக் அவுட் ஆனதை கண்ட கேப்டன் ரோஹித் சர்மா கோபம் அடைந்தார். சுப்மன் கில் அவுட் ஆகி வெளியே சென்ற போது முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு இருந்தார்.
இதற்கு முன் தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரிலும், இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டியிலும் அவர் ரன் குவிக்காததை அடுத்து, இரண்டாவது டெஸ்ட் போட்டியே அவருக்கு கடைசி போட்டி என இந்திய அணி நிர்வாகம் கூறி இருந்தது. ஆனால், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த சுப்மன் கில், அணியில் தன் இடத்தை உறுதி செய்தார்.

இந்த நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் துவக்கக் வீரர் ஜெய்ஸ்வால் 10 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்த உடன் பேட்டிங் செய்ய வந்தார் சுப்மன் கில். ரோஹித் சர்மா மறுபுறம் ஆடினார். வெறும் 9 பந்துகள் மட்டுமே சந்தித்த சுப்மன் கில் இங்கிலாந்து விக்கெட் கீப்பர் பென் ஃபோக்ஸ்-இடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அவர் பொறுப்பற்ற முறையில் ஒரு ரன் கூட எடுக்காமல் ஆட்டமிழந்ததை கண்ட கேப்டன் ரோஹித் சர்மா கோபம் அடைந்தார். சுப்மன் கில் தலையை குனிந்து கொண்ட ஆடுகளத்தை விட்டு வெளியேறினார். அப்போது கோபத்தை காட்டாமல் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு நின்றார் ரோஹித் சர்மா.
அடுத்து வந்த ரஜத் படிதார் 5 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இதை அடுத்து இந்திய அணி 33 ரன்களுக்கு 3 விக்கெட்களை தவித்தது. ஐந்தாம் வரிசையில் சர்பராஸ் கானுக்கு முன்னதாக ரவீந்திர ஜடேஜா பேட்டிங் செய்ய அழைக்கப்பட்டார். அதன் மூலம் வலது கை - இடது கை பேட்ஸ்மேன்கள் ஒரே நேரத்தில் இருந்தால் இங்கிலாந்து அணிக்கு சற்று அழுத்தம் கொடுக்கலாம் என்பதால் அந்த முடிவை எடுத்தது இந்திய அணி. அது ஒரு வகையில் வேலை செய்தது. ஜடேஜா ஒரு பக்கம் நிலைத்து நின்று ஆடினார். மறுபுறம் ரோஹித் சர்மா அரைசதம் கடந்து ரன் சேர்த்தார். இந்திய அணி 100 ரன்களை கடந்தது.