விசாகப்பட்டினம் : இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சு திட்டத்தின் படி முகேஷ் குமாரால் செயல்பட முடியவில்லை. மூன்று முறை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் முகேஷ் குமாருக்கு கேப்டன் ரோஹித் சர்மா பந்து வீச வாய்ப்பு அளித்தார். ஆனால், மூன்று முறையும் ரன்களை வாரிக் கொடுத்து ஏமாற்றம் அடைந்தார் முகேஷ் குமார்.
இங்கிலாந்து அணியை முதல் டெஸ்ட் போட்டியில் வீழ்த்த முடியாத நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பந்துவீச்சு திட்டத்தை மாற்றியது. ஸ்பின் பவுலர்கள் தங்கள் பணியை முதல் போட்டி போலவே செய்வார்கள். ஆனால், வேகப் பந்துவீச்சில் முகமது சிராஜை நீக்கி விட்டு, முகேஷ் குமார் அணியில் சேர்க்கப்பட்டார். பும்ரா அணியில் முதன்மை வேகப் பந்துவீச்சாளராக நீடித்தார்.

பும்ரா மற்றும் முகேஷ் குமார் பந்தை நன்றாக ஸ்விங் செய்ய வேண்டும். புதிய பந்து ஸ்விங் ஆகும் என்றாலும் அது சில ஓவர்களுக்கு மட்டுமே எடுபடும். ஆனால், பந்து பழையதான பின்னர் ரிவர்ஸ் ஸ்விங் செய்ய முடியும். முகேஷ் குமார் ரிவர்ஸ் ஸ்விங் வீசுவதில் வல்லவர் என்பதால் அவரை அணியில் சேர்த்து இருந்தார் ரோஹித் சர்மா. இது தான் இந்திய அணியின் திட்டமாக இருந்தது.
ஸ்பின் பவுலர்களுக்கு இடையே பும்ரா, முகேஷ் குமார் மாறி, மாறி பந்து வீசி தங்கள் ஸ்விங் பந்துவீச்சின் மூலம் விக்கெட் வீழ்த்த வேண்டும். பும்ரா தன் பணியை சிறப்பாக செய்தார். ஆனால், முகேஷ் குமாருக்கு முதலில் இரண்டு ஓவர்கள் வழங்கப்பட்ட போது அவர் 2 ஓவர்களில் 22 ரன்கள் கொடுத்தார். அதனால், சில ஓவர்கள் ஸ்பின் பவுலர்கள் பந்து வீசிய பின் மீண்டும் முகேஷ் குமாருக்கு ஒரு ஓவர் தரப்பட்டது. அப்போதும் அவர் ரன்களை விட்டுக் கொடுத்தார். அவரால் ஸ்விங் செய்யவும் முடியவில்லை. பின் மீண்டும் ஒரு முறை ஒரு ஓவர் கொடுக்கப்பட்டது. அப்போதும் அவரால் ஸ்விங் செய்ய முடியவில்லை. ரன்களும் அதிகமாக விட்டுக் கொடுத்தார்.
இப்படி மூன்று முறை பந்துவீசும் வாய்ப்பை பெற்று மொத்தம் 4 ஓவர்களில் 33 ரன்கள் விட்டுக் கொடுத்து ஏமாற்றம் அளித்தார் முகேஷ் குமார். நான்காவது ஓவரை அவர் வீசி முடித்த பின் மிகவும் சோர்ந்து காணப்பட்டார். தன்னால் அணியின் திட்டத்தின் படி பந்து வீச முடியவில்லை என அவர் சோர்ந்து இருந்த நிலையில், கேப்டன் ரோஹித் சர்மா அவரைத் தட்டிக் கொடுத்து அவரிடம் சில வார்த்தைகள் பேசி அவரை அமைதிப்படுத்தினார்.
இந்தியா முதல் இன்னிங்ஸில் 396 ரன்கள் சேர்த்த நிலையில், இங்கிலாந்து அணி அடுத்து ஆடிய போது 182 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்து தவித்தது. முகேஷ் குமார் பந்துவீச்சில் ஏமாற்றம் அளித்த போதும் குல்தீப் யாதவ், பும்ரா தலா 3 விக்கெட்கள் வீழ்த்தி இந்திய அணியை முன்னிலையில் வைத்திருந்தனர்.