ஹைதராபாத் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் அதிரடி துவக்கம் அளித்தாலும் அஸ்வின், ஜடேஜாவை பந்து வீச அழைத்ததும் தடுமாறியது. அப்போது மூன்றாவது வரிசையில் பேட்டிங் செய்ய வந்த ஆலி போப் பேட்டிங் செய்யத் திணறிக் கொண்டு இருந்தார். அவர் மட்டும் நின்று ஆடி இருந்தால் நிலைமை மாறி இருக்கும்.
ஆனால், அவரது சொதப்பல் பேட்டிங் ஒரு புறமிருக்க, ஜடேஜா பந்துவீச்சில் ரோஹித் சர்மா அபாரமான கேட்ச் பிடித்து அவரை அவுட் ஆக்கினார். அதன் பின் இங்கிலாந்து அணி அதிரடி ஆட்டத்தை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு திணற ஆரம்பித்தது. ஆட்டத்தை திருப்பிய தருணமாக அமைந்தது இந்த விக்கெட்.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அது அந்த அணிக்கு சாதகமான விஷயமாக பார்க்கப்பட்டது. அதே போல முதல் எட்டு ஓவர்களில் பும்ரா மற்றும் சிராஜ் பந்துவீச்சை துவம்சம் செய்தது இங்கிலாந்து துவக்க ஜோடி. முதல் 8 ஓவர்களில் இங்கிலாந்து அணி 41 ரன்கள் குவித்தது.
அதனை அடுத்து ஜடேஜா - அஸ்வின் ஜோடியாக பந்து வீசினர். அப்போது ரன் குவிக்க முடியாமல் திணறிய இங்கிலாந்து அணி முதல் விக்கெட்டை கொடுத்தது. அஸ்வின் பந்துவீச்சில் டக்கெட் 39 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஆலி போப் ஸ்பின் பந்துவீச்சை சந்திக்க முடியாமல் திணறினார். அவர் பந்தை பல மாதிரியாக அடிக்க முயன்றும் ஒரு முறை கூட பேட்டில் பந்து சரியாக படவில்லை. முதலில் எட்ஜ் ஆனது. ஒரு முறை அவர் உடம்பில் பட்டது. அதன் பின் நான்கு - ஐந்து முறை ரிவர்ஸ் ஸ்வீப் அடிக்க முயன்று அதிலும் தோல்வி அடைந்தார்.
முதல் பத்து பந்துகளில் தடுமாறிய அவர் ஜடேஜா ஓவரில், தனது 11வது பந்தில் ஸ்லிப்பில் இருந்த ரோஹித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். தரையோடு வந்த பந்தை அபாரமாக கேட்ச் பிடித்து அசத்தினார் ரோஹித். அதன் பின் இங்கிலாந்து அணி வரிசையாக விக்கெட்களை இழந்தது. பென் ஸ்டோக்ஸ் மட்டும் போராடி 70 ரன்கள் குவித்தார். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்க்ஸில் 246 ரன்கள் எடுத்தது.