மும்பை: சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு இந்தியா ஏ அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இது யாரும் எதிர்பாராத ஒன்றாக அமைந்தது. ஏனெனில், கடந்த காலங்களில் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு இந்திய அணியிலும், இந்தியா ஏ அணியிலும் வாய்ப்பு வழங்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வந்தாலும், பிசிசிஐ அதை கண்டுகொள்ளாமல் இருந்தது.
அவர் வளர்ச்சி அடைந்தால், அது இந்திய அணியில் இருக்கும் வேறு சில வீரர்களுக்குத் தலைவலியாக மாறலாம் என அவர் ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறார் என ரசிகர்கள் குற்றம் சுமத்தி வந்தனர். இந்திய அணியில் ஆடும் தகுதி அவரிடம் இருந்தாலும், தற்போது இந்திய அணியின் பிளேயிங் லெவனில் அவர் நுழைவதற்கான வாய்ப்பு குறைவாகவே இருக்கிறது. இந்த நிலையில்தான் அவர் இந்தியா ஏ அணியில் இடம் பிடித்திருக்கிறார்.

இது குறித்து பிசிசிஐ வட்டாரங்களில் விசாரித்தபோது, ருதுராஜ் கெய்க்வாட் இந்தியா ஏ அணியில் மாற்று வீரராக மட்டும்தான் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் எனவும் சுட்டிக்காட்டுகிறார்கள். எனவே, அவர் போட்டிகளில் விளையாடுவது சந்தேகம்தான் எனக் கூறப்படுகிறது. அவர் சமீபத்தில் ஆடிய 3 போட்டிகளில் 330 ரன்கள் சேர்த்திருந்தார். இரண்டு அரை சதங்கள் மற்றும் ஒரு சதம் அடித்திருந்தார்.
இதற்கு முந்தைய காலகட்டங்களில் இதைவிட சிறப்பான செயல்பாடுகளை அவர் ரஞ்சித் டிராபியில் வழங்கி இருக்கிறார். அப்போது கூட அவருக்குப் போதிய வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. ஆனால் இப்போது மூன்று போட்டிகளில் மட்டுமே ஆடிய நிலையில் அவருக்கு இந்தியா ஏ அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. இது கண் துடிப்பு தான் என ரசிகர்கள் இப்போதே குற்றம் சுமத்தி வருகின்றனர்.
ருதுராஜ் சுப்மன் கில்லுக்குப் போட்டியாக வருவார் என்பதால்தான் அணியில் இடம் அளிக்கப்படாமல் இருந்தது என ரசிகர்கள் குற்றம் சுமத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அதே சுப்மன் கில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட இருக்கிறார். எனவே, இனி ருதுராஜ் கெய்க்வாட் ஆடினாலும், அவரது இடத்துக்குப் பெரிய பாதிப்பு இல்லை என்பதால் தான் மீண்டும் இந்தியா ஏ அணியில் அவருக்கு இடம் அளிக்கப்பட்டு இருப்பதாகச் சிலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.
2025 ஐபிஎல் தொடரிலிருந்து காயம் காரணமாக விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் இந்தியா ஏ அணியில் இடம்பெறுவதற்கு முன், தனது காயம் சரியாகிவிட்டதற்கான உடல் தகுதிச் சான்றிதழைப் பெற வேண்டும். அதன் பிறகு அவரால் இந்தியா ஏ அணிக்காகப் போட்டிகளில் விளையாட முடியும்.
இந்தியா ஏ அணி: அபிமன்யு ஈஸ்வரன் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கருண் நாயர், துருவ் ஜூரல் (துணை கேப்டன், விக்கெட் கீப்பர்), நிதிஷ் குமார் ரெட்டி, ஷர்துல் தாக்கூர், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), மானவ் சுதர், தனுஷ் கோட்டியான், முகேஷ் குமார், ஆகாஷ் தீப், ஹர்ஷித் ராணா, அன்ஷுல் கம்போஜ், கலீல் அகமது, ருதுராஜ் கெய்க்வாட், சர்ஃபராஸ் கான், துஷார் தேஷ்பாண்டே, ஹர்ஷ் துபே குறிப்பு: சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் இரண்டாவது போட்டிக்கு முன்னதாக அணியில் இணைவார்கள்.