மும்பை : இந்திய டெஸ்ட் அணியில் சர்ஃபராஸ் கான் அறிமுகமாகி உள்ள நிலையில், அவர் ஸ்பின் பந்துவீச்சில் ரன் குவிப்பதில் வல்லவர் என்று பலரும் கூறி வருகின்றனர். அதன் பின்னணி குறித்து பல மாநில கிரிக்கெட் அமைப்பை சேர்ந்த பயிற்சியாளர்கள் பேசி இருக்கிறார்கள். மும்பை மற்றும் உத்தரபிரதேச அணிக்காக மட்டுமே ஆடி இருந்த சர்ஃபராஸ் கான் குறித்து பிற மாநில பயிற்சியாளர்கள் ஏன் பேச வேண்டும்?
அதற்கு ஒரு காரணம் உள்ளது. கடந்த 2020 லாக்டவுன் காலகட்டத்தில் சர்ஃபராஸ் கானின் தந்தை அவரை காரில் அழைத்துக் கொண்டு பல மாநிலங்களில் இருக்கும் தனக்கு தெரிந்த கிரிக்கெட் பயிற்சியாளர்களை அணுகி அங்குள்ள கிரிக்கெட் மைதானங்களில் சர்ஃபராஸ் கானுக்கு ஸ்பின் பந்துவீச்சு பயிற்சி அளித்து இருக்கிறார். அது சாதாரண பயிற்சி இல்லை. எந்த ஒரு கிரிக்கெட் வீரரும் இப்படிப்பட்ட பயிற்சிகளை செய்ய யோசிப்பார்கள். அதன் காரணமாகவே சர்ஃபராஸ் கான் தற்போது ஸ்பின் பந்துவீச்சை எதிர்கொள்வதில் தேர்ந்தவராக இருக்கிறார்.

முதலில் மும்பையை சுற்றி உள்ள மைதானங்களில் ஸ்பின் பந்துவீச்சாளர்களை அழைத்து தினமும் 500 பந்துகளை எதிர்கொள்ளுமாறு சர்ஃபராஸ் கானுக்கு பயிற்சி அளித்து இருக்கிறார் அவரது தந்தை நௌஷத் கான். அதில் ஆஃப் ஸ்பின், லெக் ஸ்பின், ஆர்த்தோடாக்ஸ் ஸ்பின் என அனைத்து வகையான உள்ளூர் ஸ்பின்னர்களையும் அழைத்து அவர் பந்து வீசச் செய்துள்ளார்.
ஸ்பின் பந்துவீச்சு என்பது பிட்ச்சின் உதவியுடன் தான் எடுபடும் என்பதால் மும்பை மைதானங்கள் அனைத்திலும் பயிற்சி செய்து முடித்த பின் பிற மாநில மைதானங்களுக்கு சென்று அங்குள்ள பிட்ச்களில் பயிற்சி செய்ய வேண்டும் என முடிவு செய்தார் நௌஷத் கான். அதற்காக லாக்டவுன் சமயத்தில் தங்கள் காரை எடுத்துக் கொண்டு அம்ரோஹா, மொராதாபாத், மீரட், கான்பூர், டேராடுன் என தனக்கு தெரிந்த பயிற்சியாளர்கள் இருக்கும் இடங்களுக்கு எல்லாம் சர்ஃபராஸ் கானை அழைத்து சென்று இருக்கிறார் நௌஷத் கான்.
அங்கே தினமும் 500 ஸ்பின் பந்துகளை சர்ஃபராஸ் கான் எதிர்கொள்ள வேண்டும். இதற்காக அப்போது 1600 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து இருக்கிறார் சர்ஃபராஸ் கான். அதன் காரணமாக பல்வேறு பயிற்சியாளர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததோடு அவர்கள் கூறிய விஷயங்களையும் கற்றுக் கொண்டு ஸ்பின் பந்துவீச்சை அடித்து ஆடுவதில் தேர்ச்சி பெற்று இருக்கிறார் சர்ஃபராஸ் கான்.
அது மட்டுமின்றி உள்ளூர் போட்டிகளின் போது ஸ்பின் பந்துவீச்சுக்கு சாதகமான சென்னையில் போட்டி நடக்க இருந்தால், அதற்கு முன்னதாக மும்பையில் ஒரு பிட்ச்சை குத்தி சேதப்படுத்தி ஸ்பின் பந்துவீச்சுக்கு முற்றிலும் சாதகமானதாக மாற்றுவாராம் நௌஷத் கான். அந்த பிட்ச்சில் ஸ்பின் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வது கடினமாக இருக்கும். ஆனால், அந்த சூழ்நிலையில் சர்ஃபராஸ் கானை பயிற்சி செய்ய சொல்வாராம்.
இப்படி கடினமான பயிற்சிகளை மேற்கொண்டதாலேயே சர்ஃபராஸ் கான் தனக்கு கிடைத்த முதல் டெஸ்ட் போட்டி வாய்ப்பிலேயே இரண்டு அரைசதம் அடித்து அணியில் தன் இடத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டு இருக்கிறார்.