ராஞ்சி : இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய நான்காவது டெஸ்ட் போட்டியின் இடையே சர்ஃபராஸ் கான் கேட்ச் பிடித்த பின் திடீரென ஆடுகளத்துக்கு வெளியே பார்த்து கைகளால் முத்தம் கொடுப்பது போல சைகை செய்தார். அந்த காட்சி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சர்ஃபராஸ் கான் அறிமுகம் செய்யப்பட்டார். தன் முதல் போட்டியிலேயே அவர் இரண்டு அரைசதங்கள் அடித்து தன் திறமையை நிரூபித்து இருந்தார். அந்தப் போட்டியை அவரது தந்தை மற்றும் மனைவி நேரில் கண்டனர்.

ஆனால், நான்காவது டெஸ்ட் போட்டியை அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் யாரும் நேரில் வந்து பார்ப்பதாக தெரியவில்லை. இந்த நிலையில், இங்கிலாந்து அணியின் டாம் ஹார்ட்லி கொடுத்த கேட்சை ஓடி வந்து பாய்ந்து, டைவ் அடித்து பிடித்தார் சர்ஃபராஸ் கான்.
அவரது உடல்வாகின் காரணமாக அவரால் சரியாக ஃபீல்டிங் செய்ய முடியாது என்ற விமர்சனம் அவர் அணியில் இடம் பெறுவதற்கு முன்பு இருந்தே இருந்தது. இந்த நிலையில், அபாரமான கேட்ச் பிடித்த சர்ஃபராஸ் கான், உடனே எழுந்து தனக்காக கைதட்டி ஆர்ப்பரித்த ரசிகர்களையும், இந்திய அணியின் அறையையும் பார்த்து காற்றில் முத்தத்தை பறக்கவிட்டார்.
தன்னால் பாய்ந்தும் கூட கேட்ச் பிடிக்க முடியும் என அவர் இந்திய அணி பயிற்சியாளர்கள் குழுவிற்கு செய்தி சொல்லும் வகையில் இப்படி செய்து இருக்கலாம் அல்லது ரசிகர்களை பார்த்து இவ்வாறு செய்து இருக்கலாம்.
இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 353 ரன்களும், இந்திய அணி 307 ரன்களும் எடுத்தன. அடுத்து இரண்டாவது இன்னிங்க்ஸில் 145 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது இங்கிலாந்து அணி. இந்திய அணிக்கு 192 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது நாள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள் எடுத்துள்ளது. நான்காவது நாளின் உணவு இடைவேளைக்குள் இந்திய அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது.