விசாகப்பட்டினம் : இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சர்பராஸ் கானுக்கு இந்திய அணியில் இடம் அளிக்கப்படவில்லை. அவருக்கு பதிலாக மற்றொரு அறிமுக வீரராக ரஜத் படிதார் அணியில் சேர்க்கப்பட்டார்.
நமது தளத்தில் நேற்று சர்பராஸ் கானை அணியில் சேர்க்க விடாமல் மும்பை லாபி கிரிக்கெட் வீரர்கள் மற்றும் தடை செய்ய காய் நகர்த்தி வருவது குறித்து எழுதி இருந்தோம். இந்த மும்பை லாபி என்பது இந்திய கிரிக்கெட்டில் தாங்கள் சொல்வது தான் நடக்க வேண்டும், தங்கள் கட்டுப்பாட்டில் தான் இந்திய கிரிக்கெட் அணி இருக்க வேண்டும் என நினைக்கும் ஒரு குழு.

நாம் நேற்று சொன்னது போலவே, இன்று சர்பராஸ் கானை அணியில் சேர்க்கவில்லை. அடுத்து மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக காயத்தால் விலகி இருக்கும் கே எல் ராகுல் அல்லது ஓய்வில் இருக்கும் விராட் கோலி மீண்டும் அணியில் இணைந்தால் சர்பராஸ் கான் அத்தோடு வீட்டுக்கு அனுப்பப்படுவார். ஆக மொத்ததில் சமூக ஊடகங்களில் சர்பராஸ் கானை அணியில் சேர்க்க வேண்டும் என்ற குரல்கள் அதிகரித்து வந்ததால் அதை சமாளிக்க அவர் "ஒப்புக்கு சப்பாணியாக" சேர்க்கப்பட்டு இருப்பதாகவே தெரிகிறது.
இந்தியா - இங்கிலாந்து மோதி வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்து இருக்கிறது. அணியில் கே எல் ராகுல், விராட் கோலி ஆகிய இரண்டு சிறந்த பேட்ஸ்மேன்கள் இல்லை. ஆல் - ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக விலகி இருக்கிறார். அனுபவ வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி காயம் காரணமாக தொடரிலேயே சேர்க்கப்படவில்லை.
இந்த நிலையில் குறைந்தபட்சம் பேட்டிங்கை பலப்படுத்த உள்ளூர் டெஸ்ட் தொடர்களில் அதிக ரன் குவித்து வரும் சர்பராஸ் கான் மற்றும் ரஜத் படிதார் மாற்று வீரர்களாக அணியில் சேர்க்கப்பட்டனர். இருவரையும் ஒப்பிட்டு பார்த்தால் யார் சிறந்த வீரர் என்பது தெளிவாக புரியும். ரஜத் படிதாரின் வயது 30, 55 முதல் தர டெஸ்ட் போட்டிகளில் 93 இன்னிங்ஸ்களில் 4000 ரன்கள் குவித்துள்ளார். அதன் பேட்டிங் சராசரி 46,
மறுபுறம் சர்பராஸ் கான் வயது 26. அவர் 45 முதல் தர டெஸ்ட் போட்டிகளில் 66 இன்னிங்ஸ்களில் 3912 ரன்கள் குவித்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 70. தற்போது முதல் தர உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் ஆடும் வீரர்களில் உலகிலேயே அதிக பேட்டிங் சராசரி வைத்து இருப்பவர் சர்பராஸ் கான் தான்.
இந்த ஒப்பீடுகளை பார்த்தாலே யார் சிறந்த பேட்ஸ்மேன் என்பது தெளிவாக தெரியும். ஆனாலும், ரஜத் படிதாருக்கு அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதன் பின்னணியில் மும்பை லாபி இருப்பதாகவே கூறப்படுகிறது. மும்பை மாநில அணியில் ஆடி வரும் சர்பராஸ் கானை, மும்பை லாபியே வெளியேற்றத் துடிப்பது தான் இதில் வேதனையான விஷயம்.