ராஜ்கோட் : இந்திய டெஸ்ட் அணியில் சர்பராஸ் கான் அறிமுகமான போது, அதைக் கண்டு அவரின் மனைவி கண் கலங்கி அழுதார். அப்போது அவர் அருகே சென்று கண்ணீரை துடைத்த சர்பராஸ் கான், அவரை கட்டி அணைத்தார். இந்த காட்சி நெகிழ வைப்பதாக இருந்தது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் துருவ் ஜுரேல், சர்பராஸ் கான் என இரண்டு வீரர்கள் அறிமுகம் ஆனார்கள். சர்பராஸ் கான் பல ஆண்டுகளாக சிறப்பாக ஆடியும் இந்திய அணியில் இடம் கிடைக்காமல் புறக்கணிக்கப்பட்டு வந்தார்.

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் முன்னணி வீரர்கள் சிலர் காயம் மற்றும் மோசமான ஃபார்ம் காரணமாக நீக்கப்பட்ட நிலையில் சர்பராஸ் கான் இந்திய அணியில் அறிமுகம் ஆகும் வாய்ப்பை பெற்றார். அவரது தந்தை நௌஷத் கான் கிரிக்கெட் பயிற்சியாளர் என்ற முறையில் தன் மகனின் அறிமுகத்தை காண மைதானத்துக்கு வந்தார். அவருடன் சர்பராஸ் கான் மனைவியும் இருந்தார்.
இந்திய டெஸ்ட் அணி ஜாம்பவான் அனில் கும்ப்ளே சர்பராஸ் கானுக்கு டெஸ்ட் அறிமுகம் செய்து தொப்பியை வழங்கினார். அதைக் கண்ட சர்பராஸ் கானின் தந்தை கண் கலங்கி அழுதார். தொப்பியை வாங்கிய பின் அதை தன் தந்தையிடம் கொடுத்தார் சர்பராஸ் கான். அவர் அதற்கு முத்தம் கொடுத்து, தங்கள் கனவு நிறைவேறியதை நினைத்து மகிழ்ந்தார்.
அருகில் இருந்த சர்பராஸ் கானின் மனைவியும் கண் கலங்கினார். சர்பராஸ் கான் அவரை அணைத்து தேற்றினார். இந்த காட்சி நேரலையில் வெளியான நிலையில் ரசிகர்கள் இதைக் கண்டு நெகிழ்ந்தனர். மூன்றாவது டெஸ்ட்டில் சர்பராஸ் கான் அரைசதம் அடித்து 62 ரன்கள் குவித்து தன் அறிமுகப் போட்டியை சிறப்பானதாக மாற்றினார். ரவீந்திர ஜடேஜாவால் தான் சர்பராஸ் கான் ரன் அவுட் ஆனார். அந்த சம்பவம் மட்டும் நடக்காமல் இருந்திருந்தால் சர்பராஸ் கான் சதம் அடித்து இருப்பார்.