மும்பை: 2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ள நிலையில் இந்திய அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் வீரேந்திர சேவாக் இந்திய அணியை எச்சரிக்கும் வகையில் பேசி இருக்கிறார். இந்திய அணிக்குச் சாதகமான அம்சங்கள் இருக்கிறது என்பதால் மட்டுமே, வெற்றி பெற்று விடலாம் என நினைக்கக் கூடாது என அவர் தனது பேச்சில் குறிப்பிட்டு இருக்கிறார்.
சூப்பர் 8 சுற்றில் ஜிம்பாப்வே மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிராக இந்திய பேட்ஸ்மேன்கள் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிலும் குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 195 ரன்கள் என்ற கடினமான இலக்கை இந்திய அணி வெற்றிகரமாகத் துரத்தியது. இந்த ஆட்டத்தை சுட்டிக்காட்டிய வீரேந்திர சேவாக், இந்திய அணியால் இங்கிலாந்துக்கு எதிராகவும் சிறப்பாகச் செயல்பட முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது குறித்துப் பேசிய அவர், "வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 195 ரன்களை நம்மால் துரத்தி வெற்றி பெற முடிகிறது என்றால், இங்கிலாந்து அணிக்கு எதிராகவும் அதையே செய்ய முடியும். இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு ஒன்றும் அவ்வளவு பிரமாதமானது கிடையாது. நாம் இந்தியாவில் விளையாடுகிறோம், அதுவும் நமது அணிக்கு மிகவும் பிடித்த வான்கடே மைதானத்தில் விளையாடுகிறோம். எனவே, வெற்றி வாய்ப்பு இந்திய அணிக்குத்தான் சற்று கூடுதலாக உள்ளது" என்று குறிப்பிட்டார்.

இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருந்தாலும், நாக் அவுட் போட்டிகளில் எந்தத் தவறும் செய்துவிடக் கூடாது என்பதை சேவாக் ஆணித்தரமாக கூறி இருக்கிறார். "நமக்குச் சாதகமான நிலை இருப்பதாலேயே நாம் கட்டாயம் வெற்றி பெறுவோம் என்று அர்த்தம் கிடையாது. நாக் அவுட் போட்டிகளில் எந்தவொரு சாக்குப்போக்கும் எடுபடாது."
"பேட்டிங், பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங் என மூன்று துறைகளிலும் நாம் மிகச் சிறப்பாகச் செயல்பட வேண்டும். நாம் அப்படிச் செய்திருக்கலாமே, இப்படிச் செய்திருக்கலாமே என்ற பேச்சுகளுக்கெல்லாம் நாக் அவுட் போட்டிகளில் இடமே இல்லை," என்று சேவாக் இந்திய அணி வீரர்களை உஷார்படுத்தியுள்ளார்.

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு சாதாரணமாகத் தெரிந்தாலும், அந்த அணி இலங்கை ஆடுகளங்களில் சுழற்பந்து வீச்சாளர்களை வைத்து சூப்பர் 8 சுற்றில் தோல்வியையே சந்திக்காமல் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. அந்த அணியில் வேகப்பந்து வீச்சுக்கு ஜோஃப்ரா ஆர்ச்சர் தலைமை தாங்குகிறார். ஆல்ரவுண்டர்களான சாம் கர்ரன் மற்றும் ஜேமி ஓவர்டன் ஆகியோரும் சிறப்பாகப் பங்காற்றி வருகின்றனர். மேலும், அடில் ரஷித், லியாம் டாசன் மற்றும் வில் ஜாக்ஸ் ஆகிய மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் இந்திய அணிக்கு பெரும் சவாலாக இருப்பார்கள்.
மும்பை வான்கடே மைதானத்தில் பிப்ரவரி 7 ஆம் தேதி நடந்த லீக் போட்டியில் இந்திய அணி அமெரிக்காவை எதிர்கொண்டிருந்தது. மறுபுறம் இங்கிலாந்து அணியும் இதே மைதானத்தில் இரண்டு லீக் போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தோல்வியையும் சந்தித்துள்ளது.

தொடரின் தொடக்கத்தில் கோப்பையை வெல்லும் அணியாகப் பார்க்கப்பட்ட இந்திய அணி, பலமான அணிகளுக்கு எதிராக இதுவரை ஒரு முழுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்ற சிறு குறையும் உள்ளது. அந்த குறையை இந்த அரையிறுதியில் போக்கி, இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற வேண்டும்.