லண்டன்: லார்ட்ஸ் டெஸ்டில் இங்கிலாந்திடம் 22 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அடைந்த தோல்வி, கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் ஹெர்ஷல் கிப்ஸ், இந்தியாவின் தோல்விக்கு இந்திய அணியின் மெதுவான மற்றும் தற்காப்பு பேட்டிங் தான் காரணம் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
193 ரன்கள் என்ற எளிய இலக்கைத் துரத்திய இந்திய அணி, நான்காம் இன்னிங்ஸில் காட்டிய அணுகுமுறை பலரையும் அதிருப்திக்குள்ளாக்கியது. இதுகுறித்து சமூக ஊடகத்தில் பதிவிட்ட கிப்ஸ், "இறுதியில் நெருங்கி வந்தாலும், ரன் குவிப்பதில் ஆர்வம் காட்டாததே இந்தியாவின் தோல்விக்குக் காரணம்" என்று குறிப்பிட்டார்.

ஐந்தாம் நாள் ஆட்டத்தை 58 ரன்களுக்கு 4 விக்கெட் இழப்பு என்ற நிலையில் தொடங்கிய இந்திய அணிக்கு, வெற்றி பெற 135 ரன்களே தேவைப்பட்டது. ஆனால், ஆட்டத்தின் தொடக்கத்திலேயே வெறும் 11 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறியது. 82 ரன்களுக்கு 7 விக்கெட்கள் இழப்பு என்ற நிலையில், ரவீந்திர ஜடேஜா நிதானமாக ஆடி அணியை மீட்க முயன்றார்.
நிதீஷ் ரெட்டி 53 பந்துகளில் 13 ரன்கள் எடுத்தும், ஜஸ்பிரித் பும்ரா 54 பந்துகளில் 5 ரன்கள் எடுத்தும் ஜடேஜாவுடன் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இந்த படுநிதான ஆட்டம் விக்கெட் வீழ்ச்சியைத் தடுத்தாலும், ரன் ரேட் மிகவும் குறைவாகவே இருந்தது. ஜடேஜா ஆட்டமிழக்காமல் 181 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தார். அவரது போராட்டம் பாராட்டத்தக்கது என்றாலும், கடைசி வரிசை பேட்ஸ்மேன்களுடன் சேர்ந்து அதிரடியாக ஆடி ரன் சேர்க்கத் தவறியது ஒரு முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.
நிதீஷ் குமார் 50 பந்துகளுக்கும் மேல் சந்தித்த நிலையில் சில பவுண்டரிகளை அவர் அடிக்க முயன்று இருக்கலாம். ஏதேனும் ஒரு இங்கிலாந்து பந்துவீச்சாளரை அவர் குறி வைத்து ரன் குவித்து இருக்கலாம். அது ஆட்டத்தின் போக்கையே மாற்றி இருக்கும். ரிஷப் பண்ட், கே.எல். ராகுல் போன்ற முக்கிய பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்த பிறகு, இந்தியா வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் குறைந்தன. ஜடேஜா, ரெட்டி மற்றும் பும்ராவுடன் இணைந்து இந்தியாவை வெற்றிக்கு மிக அருகில் கொண்டு சென்றார்.
இருப்பினும், தொடக்கம் முதலே சில துணிச்சலான முயற்சிகளை எடுத்து ரன் குவிப்பில் வேகம் காட்டியிருந்தால், இந்த வரலாற்று சிறப்புமிக்க லார்ட்ஸ் டெஸ்டின் முடிவு இந்தியாவிற்கு சாதகமாக அமைந்திருக்கலாம் என்பதே பலரது கருத்தாக உள்ளது. முன்னாள் இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும், ரவீந்திர ஜடேஜா அல்லது நிதீஷ் குமார் ரெட்டி சற்று முன்னதாகவே அதிரடியில் இறங்கியிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.