தரம்சாலா : இந்தியா - இங்கிலாந்து அணிகள் ஆடி வரும் டெஸ்ட் தொடரில் சோயப் பஷீர் என்ற 20 வயது ஸ்பின்னரை அறிமுகம் செய்தது இங்கிலாந்து அணி. அவர் நான்காவது டெஸ்ட் போட்டியில் தனி ஆளாக இங்கிலாந்து அணியை மீட்க போராடினார்.
அந்தப் போட்டியில் அதிக ஓவர்கள் வீசிய இங்கிலாந்து பந்துவீச்சாளரும் அவர் தான். முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்களும் வீழ்த்தினார். எனினும், இந்திய அணி அந்தப் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதற்கு முன் விசாகப்பட்டினம் டெஸ்ட் போட்டியில் அவர் அறிமுகம் செய்யப்பட்ட போது அவர் 4 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.

ஒரே ஒரு போட்டியில் சோயப் பஷீர் சிறப்பாக செயல்பட்டதை வைத்து அவரை அடுத்த அஸ்வின் என பாராட்டித் தள்ளி இருக்கிறார் முன்னாள் இங்கிலாந்து வீரர் மைக்கேல் வாகன். அது மட்டுமின்றி டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்ததை விட, சோயப் பஷீர் என்ற அற்புதமான ஸ்பின்னரை இங்கிலாந்து கண்டுபிடித்ததை எண்ணி கொண்டாட்ட மனநிலையில் இருப்பதாக கூறி இருக்கிறார்.
இந்த டெஸ்ட் தொடரில் நான்கு போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி 3 - 1 என்ற கணக்கில் தோல்வி அடைந்துள்ளது. இருந்தாலும் சோயப் பஷீரை அஸ்வினுடன் ஒப்பிட்டு புகழ்ந்து பேசி அந்த தோல்வியை மறைக்கக் முயற்சி செய்து இருக்கிறார் மைக்கேல் வாகன்.
இது குறித்து அவர் பேசுகையில், "இங்கிலாந்து கிரிக்கெட்டுக்கு இது ஒரு அற்புதமான வாரம். ஒரு சிறந்த வாரத்தில், மற்றொரு உலகத்தரம் வாய்ந்த சூப்பர் ஸ்டாரைக் கண்டு பிடித்து கொண்டாடுகிறோம், சோயப் பஷீரை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். தனது இரண்டாவது டெஸ்ட் போட்டியிலேயே அவர் 8 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார். அவர்தான் புதிய அஸ்வின். எனவே, நாங்கள் இங்கிலாந்து கிரிக்கெட்டில் ஒரு புதிய சூப்பர் ஸ்டாரைக் கொண்டாடுகிறோம்," என்று வாகன் கூறினார்.
2 போட்டிகளில் மட்டுமே ஆடி இருக்கும் இளம் பந்துவீச்சாளரை, 99 டெஸ்ட் போட்டிகளில் ஆடி இருக்கும் அஸ்வினுடன் ஒப்பிட்டு தங்கள் அணியின் தோல்வியை மறைக்க முயற்சித்து இருக்கிறார் மைக்கேல் வாகன்.