மும்பை : இந்திய வீரர் ஒருவர் கடந்த நான்கு டெஸ்ட் போட்டிகளில் சரியாக ரன் குவிக்காத நிலையில் அவரது கிரிக்கெட் பேட் மற்றும் பிற உபகரணங்கள் அடங்கிய பையை அவரது மும்பை வீட்டுக்கு மூட்டை கட்டி அனுப்பியதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இதில் கொஞ்சம் உண்மையும் இருப்பது தான் அதிர வைக்கிறது.
ஸ்ரேயாஸ் ஐயர் கடந்த தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடர் மற்றும் தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடர் என இரண்டு தொடர்களில் நான்கு போட்டிகளில் பங்கேற்று இருக்கிறார். ஆனால், ஒரு போட்டியில் கூட அவர் அரைசதம் அடிக்கவில்லை. அவரது பேட்டிங்கில் டெக்னிகல் தவறு செய்வதாக தொடர்ந்து விமர்சனமும் எழுந்து வருகிறது.

2023 உலகக்கோப்பை தொடரின் போதே அவர் ஷார்ட் பால் வீசினால் அவுட் ஆகி விடுகிறார் என்ற குற்றச்சாட்டு இருந்தது. கடும் பயிற்சி செய்து அதில் இருந்து மீண்ட ஸ்ரேயாஸ் ஐயர், தற்போது தனது பலமான ஸ்பின் பந்துவீச்சில் ரன் குவிப்பதிலும் தடுமாறி வருகிறார்.
இந்த நிலையில், இங்கிலாந்து டெஸ்ட் தொடரின்
கடைசி மூன்று போட்டிகளில் அவரை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வந்தது. அதற்கு ஏற்ப அவர் தனக்கு முதுகில் வலி இருப்பதாக கூறியதாகவும், அதை அடுத்து அவர் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல் வெளியானது. அவரை கடைசி மூன்று போட்டிகளில் இருந்து நீக்கி விடலாம் என்ற முடிவை இந்திய அணி நிர்வாகம் அப்போதே எடுத்ததாக கூறப்படுகிறது. அவரது காயம் குறித்து அவர்கள் அறிந்து கொள்ள கூட விரும்பவில்லை.
இந்த நிலையில், மற்ற வீரர்களின் கிரிக்கெட் உபகரணம் அடங்கிய பைகள் மூன்றாவது டெஸ்ட் போட்டி நடக்க உள்ள ராஜ்கோட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், ஸ்ரேயாஸ் ஐயரின் பையை அவரது மும்பை இல்லத்துக்கு பார்சல் அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, ஸ்ரேயாஸ் ஐயருக்கு பெரிய காயம் எல்லாம் இல்லை. அவரை போட்டிகளில் ஆட வைக்கலாம் என தேசிய கிரிக்கெட் அகாடமி பிசிசிஐக்கு அறிக்கை அளித்து இருக்கிறது. அப்படி என்றால் நியாயமாக அவரது பை ராஜ்கோட்டுக்கு சென்று இருக்க வேண்டும். ஆனால், அவர் கிரிக்கெட் ஆடும் நிலையில் இருந்தாலும் கூட அணியில் தேர்வு செய்யப்படப் போவதில்லை என்ற முடிவில் தான் அவரது பை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. கே எல் ராகுல் காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு திரும்ப வாய்ப்பு இருப்பதால் ஸ்ரேயாஸ் ஐயர் தேவையில்லை என்ற முடிவை இந்திய அணி நிர்வாகம் எடுத்து இருக்கிறது.