மும்பை : இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மீதமுள்ள மூன்று போட்டிகளில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக நீக்கப்பட்டு இருக்கிறார். பிசிசிஐ அவரை உடனடியாக இந்திய அணியை விட்டு கிளம்பி பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு செல்லுமாறு கூறி இருக்கிறது.
ஐந்து போட்டிகள் கொண்ட இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஸ்ரேயாஸ் ஐயர் ஆடினார். அதில் அவர் 4 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்து 35, 13, 27, 29 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவரது சராசரியான ஆட்டத்தால் இந்தியாவுக்கு மிடில் ஆர்டர் பேட்டிங்கில் பின்னடைவு ஏற்பட்டது.
அவரை அணியை விட்டே நீக்க வேண்டும் என பலரும் கூறி வந்த நிலையில், தற்போது வேறு ஒரு காரணத்துக்காக பிசிசிஐ ஸ்ரேயாஸ் ஐயரை அணியில் இருந்து நீக்கி இருக்கிறது. ஸ்ரேயாஸ் ஐயருக்கு கடந்த ஆண்டு முதுகில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருந்தது. அதனால், ஓராண்டு கிரிக்கெட் ஆட முடியாமல் இருந்தார். தற்போது அவர் கடந்த ஐந்து மாதங்களாக கிரிக்கெட் ஆடி வருகிறார்.

இந்த நிலையில், அவருக்கு மீண்டும் முதுகில் வலி ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அவர் பயிற்சியில் 30 பந்துகளை சந்தித்த பின் தடுப்பாட்டம் ஆடும் போது தனக்கு முதுகில் கடும் வலி ஏற்படுவதாக அவர் கூறி இருக்கிறார். இதை அடுத்து அவரை பரிசோதித்த பின் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு செல்லுமாறு கூறி இருக்கிறது பிசிசிஐ. அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படும்.
இதை அடுத்து இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி மூன்று டெஸ்ட்டில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கப்பட்டு இருப்பதாகவும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை கடைசி மூன்று போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்படும் போது பிசிசிஐ வெளியிடும் எனவும் பிசிசிஐ வட்டாரம் தெரிவித்து இருக்கிறது. ஸ்ரேயாஸ் ஐயர் அடுத்து ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வகையில் அவரை தயார் செய்ய உள்ளது பிசிசிஐ. அப்போது தான், அவர் மீண்டும் கிரிக்கெட் ஆடி 2024 டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயார் ஆக முடியும்.