மும்பை : இந்திய வீரர்கள் அளவுக்கு சம்பாதிக்க முடியவில்லையே என்ற எண்ணத்தில் தான் இங்கிலாந்து வீரர்கள், இந்திய வீரர்களுடன் வார்த்தை மூலம் சீண்டுகிறார்கள் என இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் விளாசி இருக்கிறார்.
சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முடிவில் இந்திய அணி 4 - 1 என்ற அளவில் தொடரைக் கைப்பற்றி இருந்தது. தொடரின் முடிவில் இங்கிலாந்து வீரர்களுக்கும், இந்திய வீரர்களுக்கும் இடையே வார்த்தைப் போர் நடந்தது. அவர்கள் வெற்றி பெற முடியவில்லை என்ற விரக்தியில் சுப்மன் கில், ஜெய்ஸ்வால் போன்ற வீரர்களை சீண்டினர்.

அவர்கள் சீண்டலுக்கு தோல்வி மட்டுமே காரணம் அல்ல. ஐபிஎல் தொடரில் இந்தியாவின் மூன்றாம் தர வீரருக்கு கூட அவர்கள் தங்கள் நாட்டில் கிரிக்கெட்டில் சம்பாதிப்பதை விட கூடுதல் வருமானம் கிடைப்பதை பார்த்து அவர்கள் ஆதங்கத்தில் இருக்கிறார்கள் எனவும், ஆனால் ஆஸ்திரேலிய வீரர்கள் மட்டுமின்றி ஆஸ்திரேலிய பயிற்சியாளர்கள், உதவியாளர்கள் கூட ஐபிஎல் குறித்து புரிந்து கொண்டு இந்திய கலாச்சாரத்துடன் தங்களை இணைத்துக் கொண்டு வருமானம் ஈட்டி வருவதாகவும் சுனில் கவாஸ்கர் கூறி இருக்கிறார்.
இங்கிலாந்து அணி பற்றி அவர் பேசுகையில், "நாங்கள் உங்கள் நாட்டிற்கு வந்து கிரிக்கெட் ஆடுவதே உங்களுக்கு செய்யும் உதவி என்ற மனநிலையில் இந்தியா வந்த இங்கிலாந்து அணியை வீழ்த்தி அனுப்பியது மிகவும் சுவாரசியமாக இருந்தது. இந்த விஷயத்தில் ஆஸ்திரேலியர்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள். இந்திய கலாச்சாரத்துடன் தங்களை இணைத்துக் கொண்டனர். நமது விஷயத்தில் அவர்கள் மூக்கை நுழைக்கவில்லை. அதன் மூலம் அவர்கள் தங்க முட்டை போடும் வாத்தை அடையாளம் கண்டு கொண்டனர். அது தான் ஐபிஎல் எனும் பெரிய தங்க முட்டை இடும் வாத்து." என்றார் கவாஸ்கர்.
மேலும், "ஆஸ்திரேலியர்கள் மட்டுமல்ல. கெவின் பீட்டர்சன் இது பற்றி சொன்ன மறக்க முடியாத ஒரு விஷயம் என்னவெனில், இரண்டாம் தர, மூன்றாம் தர கிரிக்கெட் வீரர்கள் பெரிய தொகைக்கு ஏலத்தில் வாங்கப்படுவது மட்டுமின்றி ஆஸ்திரேலிய பயிற்சியாளர்கள், உடற்பயிற்சி நிபுணர்கள், பிசியோதெரபிஸ்ட்கள், ஐபிஎல் பயிற்சியாளர் குழுவில் அவர்களுக்கு பீர் குடிக்க வரும் நண்பர்கள் வரை அனைவரும் இங்கிலாந்து நாட்டில் நாங்கள் சம்பாதிப்பதை விட அதிகம் சம்பாதிக்கிறார்கள் என்றார்." என முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் ஐபிஎல் பற்றி கூறியதை குறிப்பிட்டார் கவாஸ்கர்.
மேலும், "இதனால் தான் இந்திய, இங்கிலாந்து வீரர்கள் விளையாடும் போது வார்த்தை சீண்டல்களில் ஈடுபடுகின்றனர். இங்கிலாந்து வீரர்கள் அதிக அளவில் ஐபிஎல் தொடரில் தேர்வு செய்யப்படுவதில்லை. அவர்கள் நாட்டு கிரிக்கெட் அமைப்பு அவர்களை எப்போது வேண்டுமானாலும் திரும்ப பெற்றுக் கொள்ளும். அதனால் ஐபிஎல் அணிகள் சிக்கலில் மாட்டிக் கொள்கின்றன." என்று இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல் தொடரில் அதிகம் பங்கேற்காமல் போவதன் காரணத்தை அவர் விளக்கினார்.