மும்பை : இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டியில் அணியின் துணை கேப்டனும், முக்கிய வேகப் பந்துவீச்சாளருமான பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அப்போதே அந்த முடிவு குறித்து பலரும் கடுமையான விமர்சனத்தை முன் வைத்தனர்.
நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதை அடுத்து பும்ராவுக்கு ஓய்வு கொடுத்தது பெரிய விவாதமாக மாறவில்லை. இந்த நிலையில் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் பும்ராவுக்கு ஓய்வு கொடுத்தது ஏன் எனக் கேட்டு கடும் விமர்சனத்தை முன் வைத்து இருக்கிறார். இந்திய அணியில் நடக்கும் பெரிய தவறாக இதை சுட்டிக் காட்டி இருக்கிறார்.

மூன்றாவது டேஸ் போட்டியில் வெறும் 23 ஓவர்கள் பந்து வீசிய பும்ராவுக்கு எதற்காக ஓய்வு என அவர் கேள்வி எழுப்பி இருக்கிறார். இந்த விவகாரம் குறித்து கவாஸ்கர் மிட் டே தளத்தில் எழுதி உள்ள கட்டுரையில், "ராஜ்கோட்டில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 15 ஓவர்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 8 ஓவர்களும் மட்டுமே வீசிய பும்ராவுக்கு, ராஞ்சியில் நடந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் உடற்பயிற்சி பயிற்றுனர் கூறியதால் ஓய்வு அளிக்கப்பட்டது. இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கும், மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கும் இடையே 9 நாட்கள் இடைவெளி இருந்ததை மறந்து விடாதீர்கள்" என்று எழுதி இருந்தார்.
மேலும், "அத்தனை நாள் இடைவெளி இருந்தும் 23 ஓவர்கள் மட்டுமே வீசுவது சோர்வாகவே இருக்காது. அப்படியென்றால் பும்ராவுக்கு ஏன் ஓய்வு அளிக்கப்பட்டது? நான்காவது டெஸ்ட் போட்டிக்கு பின் மீண்டும் 8 நாட்கள் ஓய்வு இருக்கிறது. உடற்தகுதியுடன் இருக்கும் வீரர்களுக்கு மீண்டு வந்து நாட்டுக்காக ஆட இதுவே போதுமான அவகாசம் ஆகும்." என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.
மேலும், "நான்காவது டெஸ்ட் முக்கியமான போட்டி, அந்த போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று இருந்தால் கடைசிப் போட்டி தொடரை நிர்ணயிக்கும் போட்டியாக மாறி இருக்கும். அதனால், ஓய்வு முடிவை தேசிய கிரிக்கெட் அகாடமி எடுத்ததோ அல்லது பும்ரா எடுத்தாரோ, அது இந்திய அணியின் நன்மைக்கான முடிவு அல்ல. இளம் ஆகாஷ்தீப், பும்ராவுக்கு பதிலாக அணியில் இடம் பெற்று சிறப்பாக பந்து வீசினார். அதன் மூலம் இந்திய அணிக்கு பெரிய வீரர்கள் தேவை இல்லை என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டது." என காட்டமாக குறிப்பிட்டு இருக்கிறார் கவாஸ்கர்.