ராஜ்கோட்: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் அபாரமாக ஆடிய திலக் வர்மாவை புகழ்ந்து தள்ளி இருக்கிறார் முன்னாள் வீரரும், பிரபல வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர். தோனியுடன் திலக் வர்மாவை ஒப்பிட்டு பேசி இருக்கிறார் மஞ்ச்ரேக்கர்.
திலக் வர்மாவுக்கு எந்தவிதமான பதற்றமோ, பயமோ இல்லை என்றும், சேஸிங்கின் போது 19 வது ஓவரில் ஒரு பவுண்டரி கூட அடிக்கப்படாத நிலையிலும் அவர் எந்த அழுத்தத்தையும் வெளிக்காட்டாமல் மகிழ்ச்சியுடன் இருந்தார் என்றும் பாராட்டி இருக்கிறார் சஞ்சய் மஞ்ச்ரேக்கர்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 166 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடியது. ஒரு பக்கம் விக்கெட்கள் வீழ்ந்து கொண்டு இருந்தபோது திலக் வர்மா மூன்றாம் வரிசையில் இறங்கி கடைசி வரை ஆட்டம் இழக்காமல் நின்று இந்திய அணியின் சேஸிங்கை வெற்றிகரமாக முடித்து வைத்தார்.
திலக் வர்மா 55 பந்துகளில் 72 ரன்கள் சேர்த்து இருந்தார். இது பற்றி பேசிய சஞ்சய் மஞ்ச்ரேக்கர், "திலக் வர்மா ரன் சேஸிங்கின் போது கடைசி வரை உறுதியுடன் ஆடினார். 18 வது ஓவரில் அவரிடம் எந்த விதமான பதற்றமும் இல்லை. 19வது ஓவரில் இந்திய அணி ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை. அப்படி செய்திருந்தால் இந்திய அணியின் அழுத்தம் குறைந்து இருக்கும். அப்போதும் எதிர் முனையில் திலக் வர்மா மகிழ்ச்சியுடன் நின்று கொண்டு இருந்தார்." என்றார்.
மேலும், தோனியுடன் திலக் வர்மாவை ஒப்பிட்டார் சஞ்சய் மஞ்ச்ரேக்கர். "இதற்கு முன் மகேந்திர சிங் தோனி என்ற மனிதர் இதே போலத்தான் தன்னம்பிக்கையுடன் ஆடி இந்திய அணியை வெற்றிக்கு அழைத்து செல்வார். அவரை போலவே திலக் வர்மாவின் மன உறுதியும் இருந்தது. இவரை போன்ற ஒரு வீரர் இருந்தால், அவர் மூன்றாம் வரிசையில் ஆடி சேசிங்கை தனது கைகளில் எடுத்துக் கொண்டால், அது நிச்சயம் மோசமான விஷயம் இல்லை." என்று திலக் வர்மா பற்றி சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பாராட்டி பேசினார்.