மும்பை : இந்திய டெஸ்ட் அணியில் தமிழக வீரர் சாய் சுதர்ஷனை சேர்க்க வேண்டும் என்ற குரல் எழுந்துள்ளது. அடுத்து இங்கிலாந்து டெஸ்ட் தொடர் நடைபெற உள்ள நிலையில், விராட் கோலி எதிர்பாராத விதமாக முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து கடைசி நேரத்தில் விலகி இருக்கிறார்.
அவருக்கு பதில் மாற்று வீரரை இன்னும் பிசிசிஐ அறிவிக்கவில்லை. இந்த சூழலில், இளம் வீரர்கள் சிலரை டெஸ்ட் அணியில் சேர்க்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன. அதில் தமிழகத்தை சேர்ந்த இடது கை பேட்ஸ்மேன் சாய் சுதர்ஷனும் ஒருவர்.
ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றிய சாய் சுதர்ஷன், சமீபத்தில் இந்திய ஒருநாள் அணியில் இடம் பெற்று தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக இரண்டு அரைசதங்கள் அடித்தார். அடுத்து இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான முதல் தர டெஸ்ட் போட்டியில் சதத்தை நூலிழையில் தவறவிட்டு இருந்தார்.

இது ஒருபுறமிருக்க விராட் கோலி, இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து விலகி உள்ள நிலையில் இளம் வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு அளிக்க வேண்டும் என பலரும் கூறி வருகின்றனர். உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் மிகச் சிறந்த பேட்டிங் சராசரி வைத்துள்ள சர்ஃபராஸ் கான் மற்றும் கடந்த காலங்களில் உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக ஆடி இருக்கும் ரஜத் படிதார் ஆகியோரை அணியில் சேர்க்கக்கூடும் என பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, தமிழக வீரர் சாய் சுதர்ஷனின் ஒருநாள் போட்டி ஆட்டம் மற்றும் இந்தியா ஏ அணியில் ஆடிய ஆட்டங்களை சுட்டிக் காட்டி அவர் தெளிவான பேட்டிங்கை கொண்டு இருக்கிறார். அதன் மூலம் அவர் டெஸ்ட் போட்டிகளுக்கு என்றே செய்யப்பட்டு இருக்கிறார் என தான் கருதுவதாக கூறி இருக்கிறார். இந்த கருத்து கிரிக்கெட் ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. சாய் சுதர்ஷனும் டெஸ்ட் அணி கோதாவில் குதித்துள்ளார். டெஸ்ட் அணியில் சாய் சுதர்ஷனுக்கு இடம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.