மும்பை : இந்திய டெஸ்ட் அணியின் துவக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இரண்டு இரட்டை சதம் அடித்து சிறப்பாக ஆடி வரும் நிலையில் அவருக்கு ஒரு ரசிகை ட்விட்டரில் காதல் கடிதம் எழுதி இருக்கிறார்.
அந்த ரசிகை உருகி, உருகி எழுதி இருக்கும் வரிகளை பார்த்த ரசிகர்கள் அதை லைக் செய்து வருகின்றனர். ஐபிஎல் அணியான ராஜஸ்தான் ராயல்ஸ் அந்த காதல் வரிகள் நிறைந்த ட்வீட்டை பகிர்ந்து, "சாதித்து விட்டாய் ஜெய்ஸ்வால்" எனக் கூறி இருக்கிறது.

அந்த ரசிகை எழுதிய காதல் வரிகள் - "யஷஸ்வி ஜெய்ஸ்வால் யார்? பார்வையற்றவருக்கு அவரே ஒளி. பசியில் வாடுபவருக்கு அவரே உணவு, நோயுற்றவர்களுக்கு அவரே மருந்து, தனிமையில் வாடுபவர்களுக்கு அவரே துணை, சோகத்தில் இருப்பவருக்கு, அவரே மகிழ்ச்சி, கைதிக்கு அவரே விடுதலை, எனக்கு, ஜெய்ஸ்வால் தான் எல்லாமே" இப்படி எழுதி இருக்கிறார் அந்த ரசிகை.
ஜெய்ஸ்வால் ஏற்கனவே இங்கிலாந்தை சேர்ந்த மேடி ஹாமில்டன் என்ற பெண்ணை காதலிப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான் இந்திய ரசிகை ஒருவர் ஜெய்ஸ்வாலை நினைத்து உருகி எழுதி இருக்கிறார். மேடி ஹாமில்டன் இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டியின் போது ஜெய்ஸ்வால் ஆட்டத்தை காண நேரில் வந்திருந்தார். இங்கிலாந்து நாட்டை சேர்ந்த அவர், இங்கிலாந்து அணியின் ஜெர்ஸியை அணியாமல் இந்திய அணியின் ஜெர்ஸியை அணிந்து இருந்தார். குறிப்பாக ஜெய்ஸ்வால் ஜெர்ஸியை அணிந்து அவருக்கு ஆதரவாக வந்திருப்பதை சுட்டிக் காட்டி இருந்தார் மேடி ஹாமில்டன்.
தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து தொடரில் மூன்று போட்டிகளில் இரண்டு இரட்டை சதம் ஒரு அரைசதம் அடித்து இருக்கிறார் ஜெய்ஸ்வால். 6 இன்னிங்களில் 545 ரன்கள் குவித்து இந்த தொடரில் அதிக ரன் அடித்த வீரராக இருக்கிறார். இன்னும் இரண்டு போட்டிகள் மீதமிருப்பதால் அவர் இன்னும் அதிக ரன் குவித்து இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் அதிக ரன் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையை செய்ய வாய்ப்பு உள்ளது.