பிர்மிங்காம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதற்கு, வேகப்பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப் வீழ்த்திய பத்து விக்கெட்டுகள் முக்கிய காரணமாக அமைந்தன. இந்த நிலையில், அவர் தனது வெற்றியை புற்றுநோய்க்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் தனது சகோதரிக்கு அர்ப்பணித்து இருக்கிறார். இது குறித்து அவர் போட்டி முடிந்தவுடன் சித்தேஷ்வர் புஜாராவிடம் பேசினார்.
இந்தப் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 587 ரன்கள் எடுத்தது. அடுத்து இங்கிலாந்து அணி ஆடியபோது ஆகாஷ் தீப் நான்கு விக்கெட்டுகளும், முகமது சிராஜ் ஆறு விக்கெட்டுகளும் வீழ்த்தினர். அடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 427 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்து டிக்ளேர் செய்தது.
இங்கிலாந்து அணி 608 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடியபோது, ஆகாஷ் தீப் சிறப்பாக பந்து வீசி ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து அவர் மொத்தம் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இந்திய அணி இந்தப் போட்டியில் 336 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், ஆகாஷ் தீப்பின் சிறப்பான பந்துவீச்சு வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது.

இதுபற்றி போட்டி முடிந்தவுடன் பேசிய அவர், "நான் இதுவரை யாரிடமும் சொல்லவில்லை. நான் இந்த வெற்றியை எனது சகோதரிக்கு அர்ப்பணிக்கிறேன். அவர் கடந்த இரண்டு மாதங்களாக புற்றுநோய்க்கு எதிராக போராடி வருகிறார். நல்ல வேளையாக, இப்போது அவர் ஓரளவு தேறியிருக்கிறார். நான் ஒவ்வொரு முறை பந்தை எடுக்கும்போதும் அவர் முகத்தை நினைத்துக் கொள்வேன். இந்தச் செயல்பாடு அவருக்கு ஆனது," என ஆகாஷ் தீப் கூறினார். அவரது இந்த பேச்சு ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் போட்டியில் ஆகாஷ் தீப் இங்கிலாந்து அணியின் முதல் ஐந்து பேட்ஸ்மேன்களில் நான்கு பேரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் 49 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒரே இன்னிங்ஸில் அந்த அணியின் முதல் ஐந்து பேட்ஸ்மேன்களில் நான்கு பேரின் விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை செய்திருக்கிறார்.
1976ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் வேகப்பந்துவீச்சாளர் மைக்கேல் ஹோல்டிங் இந்தச் சாதனையைச் செய்திருந்தார். இந்தப் போட்டியில் ஆகாஷ் தீப் அந்தச் சாதனையைச் சமன் செய்தார். அவர் பென் டக்கெட், ஜோ ரூட், ஹாரி ப்ரூக் மற்றும் ஒல்லி போப் ஆகிய நால்வரின் விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.