R Ashwin : தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வினை வீட்டுக்கு அனுப்ப முயற்சிகள் நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.
இதில் முதல் டெஸ்டில் இந்திய அணி தோல்வியை தழுவிய நிலையில், இரண்டாவது டெஸ்டில் வென்று பதிலடி கொடுக்க வேண்டிய நெருக்கடியில் களமிறங்கி இருக்கிறது. இந்த நிலையில் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் இந்த போட்டியில் மிகவும் முக்கியமான வீரராக கருதப்படுகிறார்.

ஏற்கனவே ஜடேஜா காயம் காரணமாக வெளியேறிய நிலையில் அஸ்வினின் சுமை அதிகரித்து இருக்கிறது. இந்த நிலையில் முதல் இன்னிங்சில் அஸ்வின் எந்த விக்கெட்டையும் எடுக்கவில்லை. மேலும் பேட்டிங்கில் எப்போதுமே கலக்கி வரும் அஸ்வின் கடந்த சில இன்னிங்ஸ்களாக சொதப்பி வருகிறார். தற்போது இளம் வீரர்களை நோக்கி நகர்ந்து வரும் இந்திய அணி அஸ்வினையும் வீட்டுக்கு அனுப்ப முடிவெடுத்திருக்கிறது.
அஸ்வின் தற்போது மிகப்பெரிய சாதனையான 500 விக்கெட்டுகளை எதிர்நோக்கி இருக்கிறார். அதற்கு இன்னும் அவருக்கு நான்கு விக்கெட்டுகள் தான் தேவை. எப்போதுமே ஒரு மிகப்பெரிய சாதனையை எதிர்கொள்ளும் போது அனைத்து வீரர்களுக்குமே நெருக்கடி ஏற்படும். தற்போது ஜடேஜா வேறு இல்லாததால் அஸ்வினுக்கு டபுள் மடங்கு நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது.
மேலும் அஸ்வின் ஒரு பவுலர் தான். ஆனால் பேட்டிங்கில் பலமுறை இந்திய அணியை காப்பாற்றி வருகிறார். இந்த நிலையில் அவரை ஒரு ஆல்ரவுண்டராக கணக்கிலிட்டு அவர் பேட்டிங்கில் சரியாக செயல்படவில்லை என்று கூறி அவரை வீட்டுக்கு அனுப்ப திட்டம் தீட்டப்படுகிறது. மேலும் முதல் இன்னிங்சில் அஸ்வினுக்கு வெறும் 12 ஓவர்கள் தான் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஆனால் இளம் வீரரான குல்தீப் யாதவ் 17 ஓவர்கள் வழங்கப்பட்டிருக்கிறது. இதேபோன்று ஜடேஜா இடத்தில் இருக்கும் அக்சர் பட்டேல் வெறும் நான்கு ஓவர்கள் தான் வீசி இருக்கிறார். ஆனால் அவர் ஒரு விக்கெட்டை கைப்பற்றி இருக்கிறார். அஸ்வின் வீசிய 12 ஓவர்கள் பிரச்சனையே இல்லை. ஆனால் அவர் 61 ரன்கள் விட்டுக் கொடுத்திருக்கிறார். ஒவ்வொரு ஓவருக்கு ஐந்து ரன்கள் என ஒரு நாள் கிரிக்கெட்டில் செயல்படுவது போல் அஸ்வின் பந்து வீசி இருக்கிறார்.இதுதான் தற்போது அஸ்வினுக்கு எமனாக மாறி இருக்கிறது.
எனினும் அஸ்வின் இதனை இரண்டாவது இன்னிங்ஸில் சரிகட்டி விடுவார் என நம்பப்படுகிறது. ஆனால் இந்திய அணியின் பேட்டிங்கை காரணம் காட்டி அஸ்வினை வீட்டுக்கு அனுப்பி அந்த இடத்தில் சௌரப் குமார் அல்லது வாஷிங்டன் சுந்தரை களம் இறக்க ரோகித் சர்மா முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவ்வாறு நடந்தால் அது மிகப் பெரிய தவறாகும். ஸ்ரேயாஸ், கில் போன்ற வீரர்களுக்கு பல வாய்ப்பு கொடுத்து வரும் நிலையில் அஸ்வின் போன்ற வீரர்கள் ஒரு போட்டியில் சரியாக செயல்படவில்லை என்றாலும் வீட்டுக்கு அனுப்புவது சரியா என்ற கேள்வி எழுந்துள்ளது.