மும்பை : இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இந்தியா வர உள்ள நிலையில், 20 வயதே ஆன பாகிஸ்தான் வம்சாவளி வீரர் சோயப் பஷீர்-ஐ அணியில் தேர்வு செய்துள்ளது. அவர் இதுவரை மொத்தமே ஆறு மாநில அளவிலான போட்டிகளில் மட்டுமே ஆடி இருக்கிறார்.
அனுபவமே இல்லாத அந்த வீரரை வைத்து இந்தியாவை வீழ்த்த திட்டமிட்டு இருக்கிறார் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்சியாளர் பிரெண்டன் மெக்குல்லம். யார் இந்த சோயப் பஷீர்?

2003 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் சர்ரே மாநிலத்தில் பாகிஸ்தான் வம்சாவளி பெற்றோருக்கு பிறந்தவர் சோயப் பஷீர். தன் 9வது வயதில் இருந்து கிரிக்கெட் ஆடி வருகிறார். அண்டர் 17, அண்டர் 18, அண்டர் 19 அணிகளில் தொடர்ந்து பங்கேற்று வந்த அவர் கடந்த ஆறு மாதங்கள் முன்பு தான் இங்கிலாந்து கவுன்டி அணியான சோமர்செட்-இல் இணைந்தார்.
இந்த நிலையில் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சுழற் பந்துவீச்சாளர்களை தேர்வு செய்ய வேண்டி இங்கிலாந்து அணி சிறப்பு முகாம் ஒன்றை துபாயில் நடத்தியது. அதில் பங்கேற்ற ஒன்பது சுழற் பந்துவீச்சாளர்களில் இளம் வயது சோயப் பஷீரும் ஒருவர். அந்த ஒன்பது பேரில் பஷீர் பந்துவீச்சு சிறப்பாக இருப்பதை கவனித்த பயிற்சியாளர் மெக்குல்லம் அவரை அணியில் தேர்வு செய்து இருக்கிறார்.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து அணியில் சோயப் பஷீர் உட்பட நான்கு சுழற் பந்துவீச்சாளர்கள் உள்ளனர். பஷீர் 6 அடி 4 அங்குல உயரம் கொண்டவராக இருப்பதால் அவர் வீசும் சுழற் பந்துவீச்சை சமாளிப்பது கடினமாக இருப்பதும் அவரை அணியில் தேர்வு செய்ய முக்கிய காரணம். ஆனால், உள்ளூர் போட்டிகளில் அவரின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை. 6 முதல் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 10 விக்கெட் மட்டுமே வீழ்த்தி இருக்கிறார். ஆப்கானிஸ்தான் ஏ அணிக்கு எதிரான போட்டியில் அவர் 42 ரன்கள் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தி இருந்தது மட்டுமே சற்று கவனிக்கத்தக்க விஷயமாக உள்ளது. இவர் இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக இருப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.