லண்டன்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதவுள்ள நிலையில், இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் இடம் பெறுவார்கள் என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர், முதல் டெஸ்ட் போட்டிக்கான தனது உத்தேச இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்து வெளியிட்டுள்ளார். அவரது தேர்வு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
சஞ்சய் பங்கர் தனது அணியில் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு வழங்கவில்லை. அவருக்கு பதிலாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல். ராகுல் ஆகியோரையே துவக்க வீரர்களாக தேர்வு செய்துள்ளார். மூன்றாவது வரிசையில் சாய் சுதர்சனை பலரும் ஆட வைக்க வேண்டும் எனக் கூறிவரும் நிலையில், சஞ்சய் பங்கர் அவருக்கு பதிலாக அபிமன்யு ஈஸ்வரனை அந்த இடத்தில் தேர்வு செய்திருக்கிறார்.

நான்காம் வரிசையில் கேப்டன் சுப்மன் கில்லை அவர் தேர்வு செய்திருக்கிறார். சுப்மன் கில் இதுவரை முதல் மூன்று வரிசைகளில் மட்டுமே பேட்டிங் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விராட் கோலி இல்லாத நிலையில், நான்காம் வரிசையில் அவரை பேட்டிங் ஆட வைக்க வேண்டும் என சஞ்சய் பங்கர் கூறியுள்ளார்.
ஐந்தாம் மற்றும் ஆறாவது இடங்களில் கருண் நாயர் மற்றும் ரிஷப் பண்ட்டை அவர் தேர்வு செய்திருக்கிறார். விமர்சகர்கள் ரிஷப் பண்ட்டை நான்காவது அல்லது ஐந்தாவது வரிசையில் களம் இறக்க வேண்டும், அப்போதுதான் அவர் பெரிதாக ரன் குளிப்பார் என சுட்டிக்காட்டி வரும் நிலையில், அவரை ஆறாவது வரிசையில் தேர்வு செய்திருக்கிறார் சஞ்சய் பங்கர்.
அதேபோல, கருண் நாயரை ஐந்தாம் வரிசையில் தேர்வு செய்திருக்கிறார். கருண் நாயர் ரஞ்சி டிராபி உள்ளிட்ட தொடர்களில் மூன்றாவது மற்றும் நான்காவது வரிசைகளில் தான் அதிக அளவில் பேட்டிங் செய்திருக்கிறார். முதல் ஆறு பேட்டிங் வரிசையிலேயே சஞ்சய் பங்கர் பல்வேறு மாற்றங்களை செய்து இருக்கிறார்.
பந்துவீச்சாளர்களைப் பொறுத்தவரை, நான்கு பேரை மட்டுமே தேர்வு செய்திருக்கும் சஞ்சய் பங்கர், நிதிஷ் குமார் ரெட்டியை ஆல்ரவுண்டராக தேர்வு செய்திருக்கிறார். ரவீந்திர ஜடேஜாவுக்கு அவர் இடம் அளிக்கவில்லை. அவருக்கு பதிலாக குல்தீப் யாதவ் சுழற்பந்து வீச்சாளராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
வேகப்பந்துவீச்சாளர்களாக பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோரை அவர் தேர்வு செய்திருக்கிறார். நான்கு பந்துவீச்சாளர்கள் மட்டுமே போதும் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார் சஞ்சய் பங்கர். ஐந்தாவது பந்துவீச்சாளராக நிதிஷ் குமார் ரெட்டியைத்தான் தேர்வு செய்திருக்கிறார்.
இந்த அணி தேர்வு குறித்து சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக, பேட்டிங் வரிசையில் ஜெய்ஸ்வால் மட்டுமே அவரது வழக்கமான இடத்தில் விளையாடுகிறார். மற்றவர்கள் அனைவரும் இடம் மாறி விளையாடும் வகையில் தான் அவர் அணியை தேர்வு செய்திருக்கிறார்.
கிட்டத்தட்ட இதே சூழ்நிலை முன்னாள் கிரிக்கெட் வீரர் கெளதம் கம்பீருக்கும் இருந்தது. அவருக்கும் பேட்டிங் வரிசையை தேர்வு செய்வது மிகவும் சவாலானதாக இருக்கும். பல பேட்ஸ்மேன்களும் தங்களது வரிசையை மாற்றி ஆட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சஞ்சய் பங்கரின் இந்த துணிச்சலான அணித் தேர்வு, இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் எவ்வாறு செயல்படும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.