ராஜ்கோட் : இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் பேட்டிங் செய்த போது செய்த ஒரு விஷயத்தை குறிப்பிட்டு, அவர் ஏமாற்று வேலை செய்ததாகவும், விக்கெட் வீழ்த்த தனக்கு சாதகமாக பிட்ச்சை மாற்ற அவர் இப்படி தந்திரமாக நடந்து கொண்டார் என இங்கிலாந்து ஜாம்பவான் அலஸ்டர் குக் பரபரப்பை கிளப்பி இருக்கிறார்.
இந்தப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் நாள் ஆட்டத்தில் ரவீந்திர ஜடேஜா பேட்டிங் செய்து கொண்டிருந்த போது அவர் பிட்ச்சின் மீது ஓடுவதாகக் கூறி அம்பயர் அவரை எச்சரித்தார். ஐசிசி விதிப்படி பிட்ச்சின் மையப் பகுதி மீது ரன் ஓடக் கூடாது. முதலில் பேட்டிங் செய்யும் அணி அப்படி செய்தால் பிட்ச் சேதமடைந்து, அடுத்து அதே அணி பந்து வீசும் போது, பிட்ச் அவர்களுக்கு சாதகமாக செயல்படும் வாய்ப்பு கிடைக்கும். குறிப்பாக சுழற் பந்துவீச்சாளர்களுக்கு பந்து எளிதாக திரும்பும்.

இந்த காரணத்தால் முதல் நாள் ஆட்டத்தில் ஜடேஜாவை எச்சரித்து இருந்தார் அம்பயர். அடுத்து இரண்டாம் நாள் ஆட்டத்தின் போது ரவிச்சந்திரன் அஸ்வின், பிட்ச் மீது ஓடியதால் எச்சரிக்கை விடுத்த அம்பயர், அதைத் தொடர்ந்து இந்திய அணிக்கு பெனால்ட்டி கொடுத்தார். அதனால், இங்கிலாந்து அணிக்கு பேட்டிங் செய்யும் முன்பே 5 ரன்கள் கொடுக்கப்பட்டது. அந்த அணி முதல் இன்னிங்க்ஸ் ஆட்டத்தை 5 ரன்களுடன் தொடங்கியது.
அஸ்வினை அம்பயர் எச்சரித்த போது அவர் அம்பயருடன் வாக்குவாதம் செய்தார். தான் பிட்ச் மீது ஓடவில்லை என அவர் கூறினார். இதை அடுத்து இங்கிலாந்து ஜாம்பவான் அலஸ்டர் குக் அஸ்வின் தவறு செய்தது உண்மை தான் எனக் கூறினார்.
இய்த்து பற்றி அலஸ்டர் குக் பேசுகையில், "இது வேண்டுமென்றே செய்யப்பட்டதா? ஆம். அஸ்வின் பந்து வீசும் போது அதிக உதவியை எதிர்பார்ப்பதால் பிட்ச்சின் மையப் பகுதியை மிகவும் தந்திரமாக சேதப்படுத்தினார். இது ஏமாற்று வேலையாக இருந்தது இல்லையா?" எனக் கூறினார். அஸ்வின் 500 விக்கெட்கள் என்ற மைல்கல் சாதனை நிகழ்த்தியதற்கு முன் இந்த குற்றச்சாட்டை முன் வைத்து இருந்தார் அலஸ்டர் குக்.