மும்பை : இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் நீண்ட இடைவெளிக்கு பின் சுழற் பந்துவீச்சாளர் அக்சர் பட்டேல் சேர்க்கப்பட்டு இருக்கிறார். இவர் பேட்டிங்கிலும் கை கொடுப்பார் என்பதால் அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.
இவருடன் டெஸ்ட் அணியின் முக்கியமான மூன்று சுழற் பந்துவீச்சாளர்களான அஸ்வின், ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் அணியில் இடம் பெற்றுள்ளனர். இந்த நிலையில், இந்த நால்வரில் மூன்று பேர் மட்டுமே போட்டிகளில் களமிறங்குவார்கள் எனும் நிலையில் வாய்ப்பை இழக்கப் போகும் அந்த ஒருவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடர் இந்திய மண்ணில் நடைபெறும் நிலையில் ஆடுகளங்கள் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் எப்படியும் மூன்று சுழற் பந்துவீச்சாளர்களை இந்திய அணி ஒவ்வொரு போட்டியிலும் பயன்படுத்தும்.
இதில் இந்திய மண்ணில் அதிக விக்கெட் வீழ்த்தும் ஆற்றல் கொண்ட ஜடேஜா, மற்றும் அஸ்வின் நிச்சயம் அனைத்து போட்டிகளிலும் களமிறங்க வாய்ப்பு உள்ளது. ஜடேஜா பேட்ஸ்மேனாகவும் ஆடுவார் என்பதால் அவரை நீக்க வாய்ப்பே இல்லை. அஸ்வின் பேட்டிங்கில் சற்று சராசரியான வீரர் தான் என்பதால் அவரை நீக்கக் கூடும் என சிலர் கூறினாலும், இந்திய ஆடுகளங்களில் அஸ்வின் இதுவரை சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். அனுபவம் கொண்ட அவரை நீக்குவது தவறான முடிவாக அமையலாம்.
அக்சர் படேல் கடந்த முறை ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்த போது பேட்டிங்கில் கை கொடுத்து மூன்று அரைசதம் அடித்து இருந்தார். எனவே, அவரை அணியில் சேர்க்க மிக மிக அதிக வாய்ப்பு உள்ளது. ஜடேஜா, அக்சர் [படேல், அஸ்வின் என மூவருமே பேட்டிங்கில் கை கொடுப்பார்கள் என்பது கூடுதல் பலம்.
எனவே, இந்த நால்வரில் குல்தீப் யாதவ் மட்டுமே தனியாக நிற்கிறார். அவரை நீக்கவே அதிக வாய்ப்பு உள்ளது. முதல் இரண்டு போட்டிகளுக்கான அணி மட்டுமே இப்போது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் குல்தீப் யாதவ் ஆட மாட்டார் என்றே தெரிகிறது. மற்ற மூவரின் செயல்பாட்டை பொறுத்து கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளில் குல்தீப் யாதவ் களமிறங்க வாய்ப்பு உள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான உத்தேச இந்திய அணி -
ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், யாஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல் (விக்கெட் கீப்பர்), கேஎஸ் பாரத் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது. சிராஜ், முகேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), ஆவேஷ் கான்