லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடவிருக்கும் நிலையில், இந்திய டெஸ்ட் அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் ஏன் சேர்க்கப்படவில்லை என இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், பிளேயிங் லெவனில் ஓரங்கட்டப்பட்டு இருக்கும் தமிழக வீரர் சாய் சுதர்சனை இந்திய அணியில் மூன்றாம் வரிசையில் களமிறக்க வேண்டும் எனவும் அதற்கான காரணங்களையும் அடுக்கிக் கூறியுள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோத உள்ளன. விராட் கோலி, ரோஹித் சர்மா, அஸ்வின் போன்ற அனுபவ வீரர்கள் இல்லாத இந்திய அணி, சுப்மன் கில் தலைமையில் களமிறங்க உள்ளது. இது இந்திய அணிக்கு மிகப்பெரிய சவாலான தொடராக அமைந்துள்ளது.

இந்தத் தொடர் இந்திய டெஸ்ட் அணியின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கப் போகும் வீரர்களுக்கு, எதிர்காலத்தில் இந்திய அணியில் நிரந்தர இடம் பிடிக்கும் வாய்ப்பை வழங்கவுள்ளது. இதற்காகப் பல வீரர்களும் போட்டி போட்டு வருகின்றனர். ஆனால், ஸ்ரேயாஸ் ஐயருக்கு இந்த தொடரில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
ஹர்பஜன் சிங் இது குறித்துப் பேசுகையில், "ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு சிறந்த வீரர். அவர் ஒருநாள் போட்டிகளில் தன்னை நிரூபித்துள்ளார். உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி, ஐபிஎல் போன்ற பெரிய தொடர்களில் சிறப்பாகச் செயல்பட்டு இருக்கிறார். அவர் நிச்சயம் இந்திய டெஸ்ட் அணியில் இருக்க வேண்டும். அவரை தற்போது டெஸ்ட் கிரிக்கெட் வீரராகத் தேர்வுக் குழுவினர் பார்க்கவில்லை என்று நினைக்கிறேன்."
"நான் தேர்வுக் குழுவில் இருந்திருந்தால், நிச்சயமாக ஸ்ரேயாஸ் ஐயரைத் தேர்வு செய்வது குறித்து ஆலோசித்திருப்பேன். ஆனால், இது இறுதி முடிவு அல்ல. ஸ்ரேயாஸ் ஐயருக்கு இன்னும் நீண்ட நெடிய பயணம் உள்ளது. அவர் எதிர்காலத்தில் இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாகும் வாய்ப்பு உள்ளது. ஒரு தொடரில் விளையாடவில்லை என்றால், அவரது கிரிக்கெட் வாழ்வே முடிந்துவிடாது," என்று கூறினார்.
தொடர்ந்து சாய் சுதர்சன் குறித்துப் பேசிய ஹர்பஜன் சிங், "என்னுடைய கருத்தின்படி, சாய் சுதர்சன் மூன்றாம் வரிசையில் விளையாட வேண்டும். ஏனெனில், அவர் இடது கை பேட்ஸ்மேன். நல்ல ஃபார்மில் இருக்கிறார். மிகச் சிறந்த ஐபிஎல் செயல்பாட்டை வெளிப்படுத்திவிட்டு இந்தத் தொடருக்கு வந்து இருக்கிறார். அவருடைய நுணுக்கங்கள் உச்சகட்டத்தில் உள்ளன. அவரை மூன்றாவது வரிசையில் களமிறக்கினால், அதை எப்படிச் செயல்படுத்த வேண்டும் என்ற தீர்வை அவரே கொண்டு வருவார்," என்று சாய் சுதர்சனைப் பாராட்டிப் பேசினார்.
ஆனால், தற்போதைய சூழ்நிலையில் சாய் சுதர்சனுக்கு இந்திய டெஸ்ட் அணியின் ப்ளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்காது என்று கூறப்படுகிறது. மூன்றாம் வரிசையில் அபிமன்யு ஈஸ்வரன் விளையாடுவார் என முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.