மும்பை : இங்கிலாந்து அணி இந்திய அணிக்கு எதிராக ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மோத உள்ள நிலையில், அந்த அணியின் முக்கிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஹாரி ப்ரூக் ஒட்டு மொத்த டெஸ்ட் தொடரிலும் இருந்து விலகி இருக்கிறார்.
வெறும் 12 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடி இருந்தாலும் டெஸ்ட் உலகில் புதிய சாதனைகளை படைத்து இங்கிலாந்து அணியின் எதிர்காலமாக பார்க்கப்பட்டார் ஹாரி ப்ரூக். கடினமான இந்திய ஆடுகளங்களில் அவர் அணியை காப்பாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது குடும்பத்தினருடன் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு இருப்பதால் அவர் உடனடியாக இங்கிலாந்து முகாமில் இருந்து கிளம்பி இங்கிலாந்து சென்றுள்ளார். அவர் இந்தியாவில் நடைபெற உள்ள ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும் பங்கேற்க மாட்டார் என இங்கிலாந்து கிரிக்கெட் அமைப்பு அறிவித்துள்ளது.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோத உள்ள முதல் டெஸ்ட் போட்டி ஜனவரி 25 அன்று துவங்க உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. ஹாரி ப்ரூக் 12 டெஸ்ட் போட்டிகளில் 20 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்து 1181 ரன்கள் குவித்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 62.15. டெஸ்ட் போட்டிகளில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 91 என்பது குறிப்பிடத்தக்கது.
ஹாரி ப்ரூக் தனது முதல் 9 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் 809 ரன்கள் குவித்தது வரலாற்று சாதனை ஆகும். இப்படிப்பட்ட முக்கியமான வீரரை இங்கிலாந்து அணி இழந்துள்ளது. அடுத்ததாக மாற்று வீரரை விரைவில் அறிவிக்க உள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் அமைப்பு கூறி உள்ளது.
இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் ஆட உள்ள இங்கிலாந்து அணி -
பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ரெஹான் அகமது, ஜேம்ஸ் ஆண்டர்சன், கஸ் அட்கின்சன், ஜானி பேர்ஸ்டோ (விக்கெட் கீப்பர்), ஷோயப் பஷீர், ஜாக் க்ராலி, பென் டக்கெட், பென் ஃபோக்ஸ், டாம் ஹார்ட்லி, ஜாக் லீச், ஆலி போப், ஆலி ராபின்சன், ஜோ ரூட், மார்க் வூட்