மான்செஸ்டர்: தற்போது நடைபெற்று வரும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனால், இந்திய அணி இந்தத் தொடரை வெல்ல முடியுமா? இன்னும் இரண்டு போட்டிகள் மீதமுள்ள நிலையில் இந்திய அணி ஒரு போட்டியில் மட்டும் வென்றால் என்ன நடக்கும்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

முதல் டெஸ்ட் (ஹெடிங்லி): இந்த போட்டியில் இந்திய அணி வீரர்கள் சிறப்பாக விளையாடி ஐந்து சதங்களை அடித்த போதிலும், இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.
இரண்டாவது டெஸ்ட் (எட்ஜ்பாஸ்டன்): இந்த போட்டியில் இந்திய அணி அபாரமாக விளையாடி, 336 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் தனது முதல் இரட்டைச் சதத்தைப் பதிவு செய்தார். இதன் மூலம் தொடரை 1-1 என இந்தியா சமன் செய்தது.
மூன்றாவது டெஸ்ட் (லார்ட்ஸ்): மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், இங்கிலாந்து அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, மீண்டும் தொடரில் 2-1 என முன்னிலை பெற்றுள்ளது.
நான்காவது மற்றும் ஐந்தாவது டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெறுவது என்பது பெரும் சவாலான காரியமாகும். இங்கிலாந்து அணி தங்களது சொந்த மண்ணில் வலுவான நிலையில் உள்ளது. மேலும், இளம் கேப்டன் சுப்மன் கில் தலைமையில், விராட் கோலி போன்ற அனுபவமிக்க வீரர்கள் இல்லாத நிலையில், இந்திய அணி தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் வெற்றி பெறுவது கடினமான ஒன்றாகும்.
இந்த டெஸ்ட் தொடர், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட "ஆண்டர்சன் - டெண்டுல்கர்" கோப்பைக்காக நடத்தப்படுகிறது. இதற்கு முன்னர் இங்கிலாந்தில் நடைபெற்ற தொடர்கள் "பட்டோடி கோப்பை" என்ற பெயரில் நடத்தப்பட்டன. ஆஷஸ் அல்லது பார்டர்-கவாஸ்கர் டிராபி போன்ற சில தொடர்களில், தொடர் சமநிலையில் முடிந்தால், முந்தைய தொடரின் வெற்றியாளர் கோப்பையைத் தக்க வைத்துக் கொள்வார் என்ற விதிமுறை உள்ளது.
ஆனால், ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை ஒரு புதிய தொடர் என்பதால், இங்கு அந்த விதிமுறை பொருந்தாது. எனவே, தொடர் 2-2 என சமநிலையில் முடிந்தால், எந்த அணியும் கோப்பையை வென்றதாக அறிவிக்கப்படாது. இந்திய அணி இந்த கோப்பையை வெல்ல வேண்டுமென்றால், மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் கட்டாயம் வெற்றி பெற்று, தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்ற வேண்டும்.
ஒரு போட்டியில் வெற்றி, ஒரு போட்டி டிரா என்றாலும் தொடர் சமன் ஆகுமே தவிர, இந்தியா கோப்பையை வெல்ல முடியாது. அதே சமயம், இரண்டு போட்டிகளும் டிரா ஆனால், இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் தொடரை வெல்லும். எனவே, இந்திய அணி இந்த டெஸ்ட் தொடரை வெல்ல ஒரே வழி, மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெறுவது மட்டுமே.