லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்குத் தயாராகும் இந்திய டெஸ்ட் அணி வீரர்கள், தங்களுக்குள் விளையாடி வரும் இன்ட்ரா-ஸ்க்வாட் பயிற்சிப் போட்டியில், இரண்டு வீரர்கள் அரை சதம் அடித்திருப்பதாக பிசிசிஐ தகவல் வெளியிட்டுள்ளது. இந்தப் பயிற்சிப் போட்டி மூடப்பட்ட மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஊடகத்தினருக்கோ அல்லது பொதுமக்களுக்கோ அனுமதி இல்லை.
மேலும், இந்தப் போட்டி தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்படவில்லை. இதனால், இந்தப் பயிற்சிப் போட்டியில் என்ன நடக்கிறது என்பது வெளி உலகிற்குத் தெரியாத சூழ்நிலை நிலவுகிறது. இந்த நிலையில், பிசிசிஐ இந்தப் பயிற்சிப் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் சில தகவல்களை மட்டும் வெளியிட்டுள்ளது.

அதன்படி, முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள சுப்மன் கில் அரை சதம் அடித்திருப்பதாகவும், மூத்த வீரரான கே.எல். ராகுலும் அரை சதம் அடித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பந்துவீச்சாளர்களில் ஷர்துல் தாக்கூர் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், சுப்மன் கில் மற்றும் கே.எல். ராகுல் எவ்வளவு ரன்கள் எடுத்தார்கள், ஷர்துல் தாக்கூர் எத்தனை விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்ற தகவல்கள் வெளியாகவில்லை. இந்தப் போட்டி ஏன் மூடப்பட்ட மைதானத்தில் நடைபெறுகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதற்கு காரணம், அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தான் எனக் கூறப்படுகிறது. இந்தப் பயிற்சிப் போட்டியில் இந்திய அணி சில புதிய உத்திகளையும், திட்டங்களையும் பயன்படுத்திப் பார்ப்பதற்கான வாய்ப்பு உள்ளது எனவும், அது எதிரணிக்குத் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் கௌதம் கம்பீர் இவ்வாறு மூடப்பட்ட மைதானத்தில் இந்த போட்டியை நடத்த முடிவெடுத்துள்ளார் எனவும் சொல்லப்படுகிறது.
இதற்கு முன்பு நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இதே போல மூடப்பட்ட மைதானத்தில் இந்திய வீரர்கள் பயிற்சி செய்தனர். அப்போது ஆஸ்திரேலிய ஊடகங்களில் அது விமர்சனம் செய்யப்பட்டு இருந்தது. தற்போது இங்கிலாந்திலும் அதே போன்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தப் போட்டியில் இந்திய டெஸ்ட் அணியின் ப்ளேயிங் லெவன் ஒரு அணியாகவும், இந்தியா ஏ அணியைச் சேர்ந்தவர்கள் மற்றும் பிற இந்திய அணி வீரர்கள் மற்றொரு அணியாகவும் இணைந்து விளையாடுவதாகக் கூறப்படுகிறது. இதில் இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் செயல்பட்டு வரும் நிலையில், இந்தியா ஏ அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் இருப்பதாகக் கூறப்படுகிறது. எனினும், இது குறித்தும் எந்த உறுதியான தகவலும் வெளியாகவில்லை.