லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவை நிச்சயம் சேர்க்க வேண்டும் என கிரிக்கெட் விமர்சகர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர். இங்கிலாந்து மண்ணில் சுழற்பந்து வீச்சுக்கு அதிக ஒத்துழைப்பு இருக்காது என்றாலும், அணியில் ஒரு முழு நேர சுழற்பந்து வீச்சாளராவது இடம்பெற வேண்டியது அவசியமாகும்.
தற்போது இந்திய டெஸ்ட் அணியில் மூத்த வீரராக இருக்கும் ரவீந்திர ஜடேஜா முக்கிய சுழற்பந்து வீச்சாளராகச் செயல்படுவார் எனக் கூறப்படுகிறது. ஆனால், அவர் சுழற்பந்து வீச்சாளராகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை என்ற ஒரு விமர்சனமும் உள்ளது.

அவர் ஒரு ஆல்ரவுண்டராக சிறந்த வீரராக இருந்தாலும், வெறும் சுழற்பந்து வீச்சாளராக மட்டும் பார்த்தால், அவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. எனவே, பந்தை சுழல வைக்கும் ஆற்றல் உடைய குல்தீப் யாதவை பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன.
அதே சமயம், ரவீந்திர ஜடேஜாவையும் அணியிலிருந்து நீக்க முடியாது. எனவே, இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களாக இவர்கள் இருவரையும் அணியில் சேர்க்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனால், கூடுதல் வேகப்பந்து வீச்சாளர்களில் யாரேனும் ஒருவரை நீக்க வேண்டிய அவசியமும் உள்ளது.
தற்போது இந்திய டெஸ்ட் அணியில் நிதீஷ் குமார் ரெட்டி மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் இந்தியா 'ஏ' அணிக்காக விளையாடி வருகின்றனர். இதில் நிதீஷ் குமார் ரெட்டி ஒரு அரை சதம் அடித்திருக்கிறார். ஆனால், ஷர்துல் தாக்கூர் பேட்டிங்கில் பெரிதாகச் சோபிக்கவில்லை. அவரது பந்துவீச்சும் எடுபடவில்லை. எனவே, ஷர்துல் தாக்கூருக்குப் பதிலாக குல்தீப் யாதவை இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா என இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் ஒன்றாக இத்தனை காலமாக இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்து வந்தனர். அதனாலேயே குல்தீப் யாதவுக்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு அதிகமாகக் கிடைக்கவில்லை. அவர் பெரும்பாலான டெஸ்ட் தொடர்களில் மாற்று சுழற்பந்து வீச்சாளராக வெளியே அமர வைக்கப்பட்டிருந்தார். எனவே, அவருக்கு உரிய வாய்ப்பை இந்த முறை வழங்க வேண்டும் எனவும் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.