மும்பை : இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் முகமது ஷமி பெயர் இடம் பெறவில்லை. பொதுவாக முக்கிய வீரர்களை அணியில் தேர்வு செய்யவில்லை என்றால் அது குறித்து பிசிசிஐ விளக்கம் அளிக்கும். ஆனால், இந்த முறை விளக்கம் அளிக்கவில்லை.
முகமது ஷமிக்கு காலில் உள்காயம் இருப்பதாகவும், அதனால் தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் அவர் தேர்வு செய்யப்படவில்லை என்றும் அப்போது கூறப்பட்டது. இப்போதும் அவர் இன்னும் மீண்டு வரவில்லை என்றாலும் அவர் எப்போது அணிக்கு திரும்புவார் என்பது குறித்து பிசிசிஐ எந்த விளக்கமும் அளிக்கவில்லை. சமீபத்தில் முகமது ஷமி தன்னை டி20 போட்டிகளில் தேர்வு செய்ய மறுக்கிறார்கள் என பேட்டி அளித்து இருந்தார்.

பிசிசிஐக்கு எதிராக அவர் பேசியதாக அப்போது பரபரப்பு எழுந்த நிலையில், தற்போது அவர் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். ஷமி காயத்தால் நீக்கப்பட்டாரா? அல்லது பிசிசிஐ அவரை ஓரங்கட்டி வைத்துள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அவருக்கு பதிலாக முகேஷ் குமார் இந்திய அணியில் இடம் பெற்று வருகிறார். அவர் சிறப்பாக பந்து வீசி வரும் நிலையில் ஷமி இனி படிப்படியாக அணியில் தன் வாய்ப்பை இழக்கக் கூடும். இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான அணியில் நான்கு வேகப் பந்துவீச்சாளர்கள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றனர். பும்ரா, முகமது சிராஜ், முகேஷ் குமார் மற்றும் ஆவேஷ் கான் அணியில் தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றனர்.
முகமது ஷமியை 2023 உலகக்கோப்பை தொடரின் போதும் முதல் சில போட்டிகளில் பயன்படுத்தவில்லை. பின்னர் ஹர்திக் பாண்டியா காயத்தால் வெளியேறிய பின்னரே அவருக்கு அணியில் வாய்ப்பு கிடைத்தது. பாதி தொடரில் மட்டுமே ஆடிய ஷமி, உலகக்கோப்பை தொடரிலேயே அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளராக இருந்தார். இப்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் காயத்தால் நீக்க்கப்பட்டு இருக்கும் நிலையில், கடைசி மூன்று போட்டிகளின் போது ஷமி சேர்க்கப்படுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.