மும்பை : இந்திய அணியின் நம்பிக்கை நாயகன் ரிங்கு சிங் இதுவரை டி20 அணி மற்றும் ஒருநாள் அணியில் மட்டுமே இடம் பெற்று இருந்த நிலையில் அவரை டெஸ்ட் அணியில் விரைவில் சேர்க்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதற்கட்டமாக அவர் இந்தியா ஏ அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
விராட் கோலி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இருந்து விலகி இருக்கும் நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாகவோ, அல்லது தொடரின் இடையே வேறு வீரர்கள் விலகினாலோ ரிங்கு சிங் இந்திய அணியில் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
ரிங்கு சிங் இதுவரை 11 சர்வதேச டி20 போட்டிகளில் பங்கேற்று 356 ரன்கள் குவித்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 89, ஸ்ட்ரைக் ரேட் 176 ஆகும். சமீபத்தில் நடந்து முடிந்த ஆப்கானிஸ்தான் டி20 தொடரில் கடைசி இரண்டு போட்டிகளில் 68*, 69* ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார் ரிங்கு சிங். அவரை 2024 டி20 உலகக்கோப்பை அணியில் சேர்க்க உள்ளதாக கூறப்படுகிறது.

அவர் ஆப்கானிஸ்தான் டி20 தொடர் முடிந்த கையோடு ஓய்வு எடுக்காமல் உள்ளூர் டெஸ்ட் தொடரான ரஞ்சி ட்ராபியில் பங்கேற்க சென்றார். அதில் கேரளா அணிக்கு எதிராக 92 ரன்கள் குவித்து இருந்தார். இந்த நிலையில் தான் அவருக்கு இந்தியா ஏ அணியில் சேர அழைப்பு வந்துள்ளது. இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக இந்தியா ஏ அணி தற்போது ஆடி வருகிறது. அடுத்த போட்டி நாளை தொடங்க உள்ள நிலையில் ரிங்கு சிங் அதில் பங்கேற்க இருக்கிறார்.
இந்திய அணியில் விராட் கோலி முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விடுப்பு எடுத்துள்ள நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் அவரது இடத்தில் பேட்டிங் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதை விட்டால் புஜாரா அணியில் சேர்க்கப்பட்டு விராட் கோலி இடத்தில் ஆடலாம். ஆனால், கோலி இல்லாததால் மிடில் ஆர்டரில் சமநிலை இல்லாத சூழல் ஏற்பட்டு இருக்கிறது.
இதற்கிடையே டி20 போட்டிகளில் நம்பிக்கை அளித்து வரும் ரிங்கு சிங்கை டெஸ்ட் அணியில் களமிறக்கி பரிசோதனை செய்ய பிசிசிஐ தயாராகி வருகிறது. ஆப்கானிஸ்தான் டி20 தொடரின் போது ரிங்கு சிங்குடன் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசிய பின் அவர் மீது அவர்களுக்கு ஈர்ப்பு ஏற்பட்டு உள்ளது. அவரை டெஸ்ட் அணியிலும் சேர்க்க அவர்கள் இருவரும் பரிந்துரை செய்து இருக்கலாம் என தெரிகிறது.