லண்டன்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் துணை கேப்டன் ரிஷப் பண்ட் கடுமையான நெருக்கடியில் உள்ளார். ரிஷப் பண்ட் கடைசியாக இந்திய அணி விளையாடிய நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் சராசரியாகவே பேட்டிங் செய்தார்.
அதைத் தொடர்ந்து நடைபெற்ற 2025 ஐபிஎல் தொடரிலும் அவரது பேட்டிங் படுமோசமாகவே அமைந்தது. இந்த நிலையில் தான், அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் களமிறங்க உள்ளார். ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் ரிஷப் பண்ட் துணை கேப்டனாக விளையாட இருக்கிறார்.

துணை கேப்டன் பதவி பிளேயிங் லெவனில் அவரது இடத்தை உறுதி செய்தாலும், துருவ் ஜூரல் மூலமாக அவருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தற்போது இந்தியா 'ஏ' அணியில் இடம்பெற்றுள்ள துருவ் ஜூரல், இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மாற்று விக்கெட் கீப்பராக இடம் பிடித்துள்ளார்.
துருவ் ஜூரல் சமீபத்தில் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான இரண்டு பயிற்சிப் போட்டிகளில் மூன்று அரை சதங்களை அடித்து தனது திறமையை நிரூபித்துள்ளார். ஒவ்வொரு இன்னிங்ஸிலும் வரிசையாக அரை சதங்கள் விளாசி, நல்ல ஸ்ட்ரைக் ரேட்டிலும் பேட் செய்துள்ளார். எனவே, ரிஷப் பண்ட் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் சீராக ரன் குவிக்கவில்லை என்றால், அவரை நீக்கிவிட்டு துருவ் ஜூரலை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக நியமிக்க வேண்டும் என்ற குரல் எழும்.
ஆகவே, இந்த அழுத்தத்தையும் ரிஷப் பண்ட் சமாளிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார். அதற்கு அவர் தனது பேட்டிங்கில் முன்னேற்றம் காண வேண்டும். ஒவ்வொரு போட்டியிலும் குறைந்தபட்சம் அரை சதம் அடிக்க வேண்டும். அப்போதுதான் இங்கிலாந்து தொடருக்குப் பிறகு ரிஷப் பண்டுக்கு இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைக்கும். இல்லை எனில், இந்தத் தொடருடன் அவர் அணியில் இருந்து நீக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.