ஹைதராபாத் : இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது பிசிசிஐ. இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோத உள்ள டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது. அந்த மைதானம் சுழற் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்காது என கூறப்படுகிறது.
இந்தியாவில் நடக்கும் டெஸ்ட் போட்டிகள் என்றாலே சுழற் பந்துவீச்சாளர்களை வைத்து தான் இந்திய அணி தன் திட்டத்தை வகுக்கும். ஆனால், இந்த முறை முதல் போட்டியை சுழற்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்காத ஹைதராபாத்தில் நடக்கும் வகையில் பிசிசிஐ திட்டமிட்டு இருக்கிறது.
அதன் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் இங்கிலாந்து பேட்டிங் செய்தால் இடைவேளைக்குள் அந்த அணி நல்ல ஸ்கோரை எடுத்து விடும் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறி இருக்கிறார். அது மட்டும் நடந்து விட்டால் கேப்டன் ரோஹித் சர்மா எப்படி பந்துவீச்சாளர்களை பயன்படுத்தப் போகிறார் என்பதை வைத்து தான் போட்டியின் முடிவு அமையும் என கவாஸ்கர் கூறி இருப்பது ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்துவதாக உள்ளது.

தற்போது இந்திய டெஸ்ட் அணியில் திறமையான நான்கு சுழற் பந்துவீச்சாளர்களும் உள்ளனர். ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், அக்சர் பட்டேல் என நால்வருமே ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை. அதனால், எப்படியும் ஒவ்வொரு போட்டியிலும் மூன்று சுழற் பந்துவீச்சாளர்களை இந்திய அணி பயன்படுத்தும் என கூறப்பட்டு வருகிறது. ஆனால், ஹைதராபாத் டெஸ்ட் போட்டியில் சுழற் பந்துவீச்சு எடுபடாமல் போனால் இந்தியா வசமாக சிக்கிக் கொள்ளும்.
முதல் டெஸ்ட்டில் இந்தியா தோற்றால் கடைசியில் கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சாளர்களை சரியாக பயன்படுத்தவில்லை என்ற விமர்சனம் எழும். அந்த வகையில் பிசிசிஐ டெஸ்ட் போட்டி அட்டவணையின் மூலமே ரோஹித் சர்மாவுக்கு தலைவலியை கொண்டு வந்துள்ளது. ஹைதராபாத் பிட்ச் குறித்த சந்தேகம் இருந்தாலும் அது முதல் இரண்டு நாட்களுக்கு மட்டுமே சுழற் பந்துவீச்சுக்கு பெரிதாக ஒத்துழைக்காது. மூன்றாவது நாள் முதல் பிட்ச் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக மாறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.