லண்டன்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் முழு டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் ஆடும் லெவனை முடிவு செய்வதில் சிக்கல் எழுந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய அணியின் தற்போதைய பேட்டிங் வரிசையில் யார் யார் விளையாடப் போகிறார்கள் என்ற விவரம் வெளியாகி உள்ளது.
அதில் மூன்றாம் வரிசை மற்றும் ஆறாம் வரிசையில் யார் விளையாடப் போகிறார்கள் என்பது மட்டுமே இன்னும் முடிவாகாமல் உள்ளது. இதில் தான் சாய் சுதர்சன் சிக்கி இருக்கிறார். அவருக்கான இடம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தற்போது துவக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல்.ராகுல் விளையாடப் போவது உறுதியாக இருக்கிறது. நான்காம் வரிசையில் சுப்மன் கில் விளையாடப் போவதும் உறுதியாக இருக்கிறது. ஐந்தாம் வரிசையில் ரிஷப் பண்ட் பேட்டிங் செய்ய இருக்கிறார்.
இந்த நிலையில் தான் மூன்றாம் வரிசை மற்றும் ஆறாம் வரிசைக்கான வீரர்கள் யார் என்பதை தேர்வு செய்வதற்கான ஆலோசனைகள் இந்திய அணி நிர்வாகத்தில் நடந்து வருகிறது. தற்போது இந்திய அணி பயிற்சியாளர் கௌதம் கம்பீர் இந்திய அணியுடன் இல்லை.
அவரது தாயாரின் உடல்நிலை மோசமடைந்ததால் அவர் இந்தியாவுக்கு விரைந்தார். அவர் முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இங்கிலாந்து சென்று விடுவார் என கூறப்படுகிறது. இந்த இக்கட்டான நிலையில் பேட்டிங் வரிசையை முடிவு செய்வதில் தாமதமாகி இருக்கிறது.
தற்போது மூன்றாம் வரிசையில் அபிமன்யு ஈஸ்வரன் அல்லது சாய் சுதர்சன் ஆகிய இருவரில் யாரை களமிறக்குவது என்ற கேள்வி உள்ளது. அதேபோல ஆறாவது வரிசையில் கருண் நாயர் அல்லது துருவ் ஜூரல் ஆகிய இருவரில் யாரை ஆட வைப்பது என்ற கேள்வி உள்ளது.
இதில் சாய் சுதர்சன் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டிகளில் விளையாடவில்லை. அவர் இந்தியா மற்றும் இந்தியா 'ஏ' அணிகள் மோதிய பயிற்சிப் போட்டியில் மட்டுமே விளையாடினார். மறுபுறம் அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர் மற்றும் துருவ் ஜூரல் ஆகியோர் மூன்று பயிற்சிப் போட்டிகளில் விளையாடி அதில் ரன் குவித்து இருக்கின்றனர். அதன் காரணமாக அவர்கள் மூவருக்கும் வாய்ப்பு பிரகாசமாகி இருக்கிறது.
கருண் நாயர் முதல் நான்கு வரிசையில் பேட்டிங் செய்யக்கூடியவர். அவரை ஆறாவது வரிசையில் களமிறக்கினால் அது இந்திய அணிக்கு பலன் அளிக்குமா என்ற கேள்வியும் உள்ளது. அதேபோல் அபிமன்யு ஈஸ்வரன் மூன்றாம் வரிசையில் மட்டும்தான் விளையாட முடியும் அல்லது துவக்க வீரராக விளையாட முடியும். அவருக்கான வாய்ப்பு கிடைக்குமா என்பதும் இழுபறியாக உள்ளது.
துருவ் ஜூரல் இங்கிலாந்து அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் வரிசையாக அரை சதங்களை அடித்து அசத்தியிருந்தார். அவர் மாற்று விக்கெட் கீப்பராக இருந்தாலும் ஒரு பேட்ஸ்மனாக சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். எனவே அவரை ஆடும் லெவனில் சேர்ப்பது நம்பிக்கை அளிக்கக்கூடிய விஷயமாக இருக்கும். ஆனால் இந்த நான்கு பேரில் இரண்டு பேருக்கு தான் வாய்ப்பு அளிக்க முடியும் என்ற இக்கட்டான நிலை உள்ளது. புதிய கேப்டன் சுப்மன் கில்லுக்கு இது நிச்சயம் சவாலான விஷயமாகவே இருக்கிறது.