மும்பை : இந்திய டெஸ்ட் அணியில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு புதிய சிக்கல் ஒன்று ஏற்பட்டு இருக்கிறது. இந்திய அணி அடுத்து இங்கிலாந்து அணிக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோத உள்ள நிலையில், அந்த தொடரில் யாரை விக்கெட் கீப்பராக பயன்படுத்துவது என்பதில் ஒரு குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது. அது சுற்றி வளைத்து ஸ்ரேயாஸ் ஐயரை அணியில் இருந்து நீக்கும் முடிவை நோக்கி சென்றுள்ளது.
கடந்த வாரம் முடிந்த தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் கே எல் ராகுல் தான் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்டார். டெஸ்ட் அணியின் முதன்மை விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் காயத்தில் இருந்து மீண்டு, இன்னும் போட்டிகளில் ஆட தயாராகவில்லை என்பதால், ராகுல் தற்காலிகமாக தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் விக்கெட் கீப்பராக செயல்பட்டார்.

ஆனால், இந்தியாவில் நடைபெறும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ராகுல் விக்கெட் கீப்பிங் செய்தால் சரியாக இருக்காது என கூறப்படுகிறது. இங்குள்ள பிட்ச்களில் சுழற் பந்துவீச்சு அதிகம் ஒத்துழைக்கும் என்பதால் அதிக ஓவர்களை சுழற் பந்துவீச்சாளர்களே வீசுவார்கள். அதற்கு ஒரு முழு நேர விக்கெட் கீப்பர் இருப்பது தான் சரியான முடிவாக இருக்கும். சுழற் பந்துவீச்சில் ராகுலின் கீப்பிங் இன்னும் மேம்பட வேண்டும் என பயிற்சியாளர் குழு கருதுகிறது.
எனவே தான், இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பில் கே எல் ராகுல், பாரத் மற்றும் துருவ் ஜுரேல் என மூன்று விக்கெட் கீப்பர்கள் இடம் பெற்று இருந்தனர். தற்போது வந்துள்ள தகவல்களின்படி பாரத் தான் அணியின் விக்கெட் கீப்பராக செயல்படுவார் என கூறப்படுகிறது. ராகுல் பேட்ஸ்மேனாக இடம் பெறுவார். இதில் தான் ஸ்ரேயாஸ் ஐயருக்கு சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது.
பாரத், ராகுல் இருவரும் அணியில் இடம் பெற வேண்டும் என்றால் மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்யும் விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரில் ஒருவர் வழி விட வேண்டும். எனவே தான், தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் சுமாராக பேட்டிங் செய்த ஸ்ரேயாஸ் ஐயரை நீக்கி விட்டு, அவரது ஐந்தாம் வரிசையில் கே எல் ராகுல் பேட்டிங் செய்ய இருப்பதாகவும், ஆறாம் வரிசையில் பாரத் பேட்டிங் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.