மும்பை : தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய ஊடகங்களில் இந்திய மைதான ஊழியர்கள் மற்றும் இந்திய அம்பயர்கள் தவறு செய்தால் அவர்கள் குறித்து தரக்குறைவான தலைப்புச் செய்தி வைத்து எழுதுகிறார்கள். அதே விஷயத்தை அவர்கள் நாட்டு மைதான ஊழியர்களோ, அம்பயர்களோ செய்தால் அது மனிதத் தவறு என எழுதுவார்கள் என சுனில் கவாஸ்கர் சமீபத்திய சம்பவங்களை சுட்டிக் காட்டி விளாசி இருக்கிறார்.
சமீபத்தில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் ஆடிய இரண்டு டெஸ்ட் போட்டிகளும் குறைந்த நாட்களில் முடிந்தன. முதல் டெஸ்ட் மூன்று நாட்களிலும், இரண்டாவது டெஸ்ட் வெறும் 107 ஓவர்களிலும் முடிவுக்கு வந்தன. அந்தப் போட்டி நடைபெற்ற பிட்ச்கள் மோசமாக இருந்ததாகவும், இந்தியாவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்துடன் பவுன்ஸ் பந்துகளுக்கு சாதகமான வகையில் வடிவமைக்கப்பட்டு இருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

ஆனால், அது குறித்து வெளிநாட்டு ஊடகங்கள் பெரிய அளவில் விமர்சனம் செய்யவில்லை. கடந்த காலங்களில் இந்தியாவில் பிட்ச் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்த போதெல்லாம், இந்திய அணி வேண்டுமென்றே பிட்ச்சை சிதைத்து சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக தயார் செய்தது எனவும், மைதான ஊழியர்கள் ஏமாற்றி விட்டார்கள் என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் விமர்சனம் செய்து இருக்கின்றன.
இது குறித்து பேசிய சுனில் கவாஸ்கர். "இந்திய மைதான ஊழியர்கள் காய்ந்து போன பிட்ச்சை) சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக) தயார் செய்தால் அது ஏமாற்று வேலை என்பார்கள். நம் ஊழியர்கள் அதை வேண்டுமென்றே செய்ததாக கருதப்படும். ஆனால், அவர்களுடைய ஊழியர்கள் அதை செய்தால் அவர்கள் தவறாக பிட்ச்சை தயார் செய்து இருக்கிறார்கள் என்பார்கள்." என்றார் கவாஸ்கர்.
"அதே போல இந்திய அம்பயர்கள் தவறு செய்தால் அது ஏமாற்று வேலை என்பார்கள். "டெல்லியின் கசாப்புக்காரர்" என அம்பயர் குறித்து கேவலமான தலைப்புச் செய்தி வைப்பார்கள். ஆனால், அவர்கள் அம்பயர்கள் தவறு செய்தால் அது மனிதத் தவறு என்பார்கள். இன்னும் சில வாரங்களில் ஒரு நாட்டுடன் டெஸ்ட் தொடர் துவங்க உள்ளது. அந்த நாட்டின் ஊடகங்கள் தான் விளையாட்டில் முனகல் போக்கை கொண்டது. அந்த நாட்டின் அணிக்கு ஒத்துவராத விஷயம் அனைத்தும் பெரிய குற்றமாக சொல்வார்கள்" என இங்கிலாந்து நாட்டின் ஊடகங்களை தனியாக குறிப்பிட்டு விளாசினார் கவாஸ்கர்.
அடுத்து இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோத உள்ள ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இந்திய மண்ணில் நடைபெற உள்ள நிலையில் அதுக் குறித்தும் இங்கிலாந்து ஊடகங்கள் விமர்சனம் செய்து எழுதுவார்கள் என கவாஸ்கர் முன் கூட்டியே கூறி இருக்கிறார்.