மும்பை : இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விராட் கோலி விலகுவதாக அறிவித்துள்ளார். இது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி வரும் 25ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்குகிறது.

இந்த போட்டிக்கு இந்திய அணி வீரர்கள் ஹைதராபாத்துக்கு வந்து பயிற்சி செய்து வருகிறார்கள். இந்த நிலையில் விராட் கோலி முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க மாட்டேன் என்று விலகி இருக்கிறார். இது குறித்து விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் அணி நிர்வாகத்திடம் முறைப்படி தெரிவித்திருக்கிறார். அதில், நாட்டுக்காக எப்போதுமே விளையாடுவது தான் என்னுடைய தலைமையான பணி.
எனினும் சில தனிப்பட்ட காரணங்கள் மற்றும் சூழ்நிலையை தம் பார்க்க வேண்டியது இருப்பதாகவும், இதனால் தமது முழு கவனமும் அந்த தனிப்பட்ட விஷயத்தில் தான் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த முடிவை தான் எடுத்துள்ளதாகவும் கூறியிருக்கிறார். விராட் கோலியின் இந்த முடிவுக்கு இந்திய அணி நிர்வாகம் ஒப்புதல் வழங்கி இருக்கிறது.
இந்த நிலையில் இது குறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், விராட் கோலி தனிப்பட்ட காரணத்திற்காக இந்திய அணியில் இருந்து விலகி இருப்பதாகவும் ரசிகர்களும் ஊடகங்களும் விராட் கோலியின் இந்த தனிப்பட்ட விஷயத்தில் தலையிட வேண்டாம் என்றும் கூறியுள்ளது.
மேலும் அவர் எந்த காரணத்திற்காக விலகி இருக்கிறார் என்பது குறித்து எந்த வியூகமும் தெரிவித்து செய்திகள் வெளியிட வேண்டாம் என்றும் பி சி சி ஐ கோரிக்கை விடுத்திருக்கிறது. விராட் கோலியின் மனைவி பிரசவத்திற்காக தான் அவர் இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் இருந்து விலகி இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இன்று நடைபெற்ற ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு விராட் கோலி செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.