லீட்ஸ்: இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸ் நகரில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. விராட் கோலி, ரோஹித் சர்மா, அஸ்வின், முகமது சமி ஆகியோர் இல்லாத நிலையில் இந்திய அணி இந்த போட்டியில் களம் இறங்கி இருக்கிறது.
கில் தலைமையில் அனுபவம் குன்றிய வீரர்கள் இடம்பெற்றுள்ளதால் இந்திய அணி இம்முறை கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. இந்திய அணி கடைசியாக இங்கிலாந்து மண்ணில் 2007 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் வென்றது.

அதன் பிறகு ஒரு முறை கூட டெஸ்ட் தொடரை வெல்லவில்லை. கடந்த முறை 2021 ஆம் ஆண்டு இந்திய அணி தொடரில் முன்னிலையில் இருந்த நிலையில் கடைசி டெஸ்டில் தோல்வியை தழுவி தொடரை சமன் செய்தது. இந்த சூழலில் பல வீரர்கள் இந்த தொடரை யார் கைப்பற்றுவார் என்று கணிப்பு வெளியிட்டு இருக்கிறார்கள்.அதனை தற்போது பார்க்கலாம்.
இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இங்கிலாந்து அணி மூன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் வெல்லும் என்று கூறியிருக்கிறார். இதேபோன்று தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் இரு அணிகளும் இரண்டு போட்டிகள் என்று தொடரை சமன் செய்யும் என்று கணித்திருக்கிறார்.
இதேபோன்று முன்னாள் இங்கிலாந்து அணி கேப்டன் மைக்கேல் வாகன் இங்கிலாந்து அணி மூன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் தொடரை வெல்லும் என்று தெரிவித்துள்ளார். இங்கிலாந்து வீரர் அலெஸ்டர் குக் இங்கிலாந்து அணி மூன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் போட்டியை வெல்லும் என குறிப்பிட்டு இருக்கிறார். இதேபோன்று முன்னாள் தென் ஆப்பிரிக்கா வீரர் டெல் ஸ்டெயின் இங்கிலாந்து அணி மூன்று போட்டியையும் இந்திய அணி 2 போட்டியையும் வெல்லும் என கூறியிருக்கின்றார்.
முன்னாள் இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர் கிராம் ஸ்வான், இங்கிலாந்து அணி நான்கு வெற்றியை பெறும். இந்தியா ஒரு வெற்றியை பெரும் என குறிப்பிட்டிருக்கிறார்.
ஆகாஷ் சோப்ரா இங்கிலாந்து அணி மூன்றுக்கு இரண்டு என்ற கணக்கில் தொடரை வெல்லும் என கூறியுள்ளார். இங்கிலாந்து அணியின் அதிரடி வீரர் ஜாஸ் பட்லர் இங்கிலாந்து அணி நான்கு போட்டிகளையும், இந்தியா ஒரு போட்டியில் வெல்லும் என குறிப்பிட்டிருக்கிறார்.
பிரபல கிரிக்கெட் விமர்சகர் டேவிட் லயார்ட் இங்கிலாந்து அணி நான்கு போட்டியும் ஒரு போட்டி டிராவாகும் என குறிப்பிட்டு இருக்கிறார். முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மைக்கேல் கிளார்க் மட்டும் தான் இந்த தொடரை இந்திய அணி வெல்லும் என குறிப்பிட்டு இருக்கிறார். அதில் இந்தியா மூன்று போட்டியிலும் இங்கிலாந்து 2 போட்டியிலும் வெல்லும் என அவர் தெரிவித்திருக்கிறார்.