லண்டன்: லார்ட்ஸில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம், இரு அணிகளுக்கு இடையே பெரும் வாக்குவாதத்துடன் முடிவடைந்தது. இதை அடுத்து இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பேட்டிங் செய்த போது மைதானத்தில் மசாஜ் செய்து கொண்டார். எங்கள் வீரர்கள் காயம் ஏற்பட்டு முதலுதவி பெற்றால் தவறா? என இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் டிம் சவுத்தி பேசி இருக்கிறார்.
மூன்றாவது நாளின் முடிவில் இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர் ஜாக் கிராலி நேரத்தை வீணடிப்பதாக இந்திய கேப்டன் சுப்மன் கில் கோபமடைந்த நிலையில், கில்லின் இந்தச் செயலை டிம் சவுத்தி இரட்டை வேடம் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மூன்றாம் நாள் ஆட்டத்தின் முடிவில், இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரான 387 ரன்களை இந்தியாவும் எட்டியது. ஆட்ட நேர முடிவிற்கு சில நிமிடங்களே இருந்த நிலையில், இங்கிலாந்து தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது. ஜஸ்பிரித் பும்ரா வீசிய ஓவரின் போது, தொடக்க ஆட்டக்காரர் ஜாக் கிராலி இரண்டு முறை பந்துவீசும் முன் விலகி நின்றார். இது இந்திய வீரர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியது. கடைசி நேரத்தில் அதிக ஓவர்களை சந்தித்து விக்கெட்டை இழந்து விடக்கூடாது என இங்கிலாந்து அணி திட்டமிட்டு இவ்வாறு செய்ததாக சர்ச்சை எழுந்தது.
குறிப்பாக இந்திய கேப்டன் சுப்மன் கில், கிராலியை நோக்கி கோபமாக சில தவறான வார்த்தைகளைக் கூறினார். மேலும், அதே ஓவரில் பந்து கையுறையில் பட்டதால் கிராலி மருத்துவ உதவி கோரியபோது, இந்திய வீரர்கள் கிண்டலாகக் கைதட்டி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதனால் களத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்துப் பேசிய இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் டிம் சவுத்தி, "நேற்றைய ஆட்டத்தின் போது சுப்மன் கில் முதுகுவலிக்காக மைதானத்தில் மசாஜ் எடுத்துக்கொண்டார். அப்போது நேரத்தை வீணடிப்பதாக நாங்கள் புகார் கூறவில்லை. எனவே, இப்போது அவர்கள் எதற்காகப் புகார் செய்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆட்டத்தின் இறுதியில் இதுபோன்ற நிகழ்வுகள் ஒருவித விறுவிறுப்பைக் கொடுக்கும்" என்று கூறினார்.
இந்த மோதல் குறித்து இந்திய வீரர் கே.எல். ராகுல் பேசுகையில், "நாளின் முடிவில் இதுபோல நடப்பது விளையாட்டின் ஒரு பகுதி. ஒரு தொடக்க ஆட்டக்காரராக கிராலியின் நிலையை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆறு நிமிடங்கள் மீதமிருந்த நிலையில், இரண்டு ஓவர்கள் வீச நாங்கள் விரும்பினோம். ஒரு விக்கெட்டை வீழ்த்தியிருந்தால், அது எங்களுக்குச் சாதகமாக இருந்திருக்கும்" என்றார்.
இரு அணிகளும் முதல் இன்னிங்ஸில் சமமான ஸ்கோரை பெற்ற நிலையில், இந்த மோதல் போட்டிக்கு மேலும் சூட்டைக் கிளப்பியுள்ளது. நான்காம் நாள் ஆட்டம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.