லண்டன்: இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டன் சுப்மன் கில்லுக்குப் பயிற்சி அளிக்கும் வகையில்தான், இந்தியா 'ஏ' அணியுடன் இந்திய டெஸ்ட் அணி விளையாடி வருவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய டெஸ்ட் அணி, அங்கு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
அதற்கு முன்னதாக, இந்திய டெஸ்ட் அணி வீரர்கள் இந்தியா 'ஏ' அணி வீரர்களுடன் ஒரு பயிற்சிப் போட்டியில் விளையாடுகிறார்கள். இந்தப் பயிற்சிப் போட்டி மூடப்பட்ட மைதானத்தில் நடைபெற்று வருகிறது. பொதுவாகவே, வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின் போது இந்திய அணி தங்களுக்குள் பயிற்சிப் போட்டிகளை விளையாடுவதை வழக்கமாக வைத்துள்ளது. இதற்கு முன் ஆஸ்திரேலியாவுக்குச் சென்றபோதும், அங்கு இந்தியா 'ஏ' அணியுடன் இந்திய அணி பயிற்சிப் போட்டியில் விளையாடியது.

அதேபோல, தற்போது இங்கிலாந்திலும் பயிற்சிப் போட்டியில் விளையாடி வருகிறது. இது அணியில் இடம்பிடித்திருக்கும் வீரர்களுக்கான பயிற்சியாக ஒரு புறம் இருந்தாலும், முக்கியமாக சுப்மன் கில்லுக்கான கேப்டன்சி பயிற்சியாகவும் இது அமைந்துள்ளது.
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக இத்தனை ஆண்டுகளாக ரோஹித் சர்மா செயல்பட்டு வந்தார். அவர் சமீபத்தில் ஓய்வு அறிவித்திருந்தார். மற்றொரு மூத்த வீரரான விராட் கோலியும் ஓய்வு அறிவித்திருந்தார். இந்த நிலையில், இந்திய டெஸ்ட் அணி சுப்மன் கில் தலைமையில் விளையாட உள்ளது.
இந்த அணியில் ஏற்கனவே இந்திய அணியின் கேப்டனாகச் செயல்பட்டிருக்கும் கே.எல். ராகுல், பும்ரா போன்ற வீரர்கள் இருந்தாலும், அவர்களை விட்டுவிட்டு சுப்மன் கில்லுக்கு கேப்டன் பதவி அளிக்கப்பட்டுள்ளது. அவர் இதற்கு முன் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாகச் செயல்பட்டதில்லை. அவர் ஐபிஎல் தொடரில் மட்டுமே கேப்டனாகச் செயல்பட்டிருக்கிறார். எனவே, அவரது கேப்டன்சி எப்படி இருக்கும் என்ற சந்தேகம் அனைவருக்கும் உள்ளது. இதனால்தான், இந்தப் பயிற்சிப் போட்டி அவருக்கான பயிற்சி களமாக அமைந்திருக்கிறது.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக இந்தப் பயிற்சிப் போட்டியின் போது இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் உடனிருக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அவரது தாயாருக்கு உடல்நிலை மோசமானது எடுத்த அவர் இந்தியாவுக்கு வந்திருக்கிறார்.
அவர் முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இந்திய அணியுடன் மீண்டும் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அவர் நேற்று தொடங்கிய பயிற்சிப் போட்டியின் முடியும் வரை இந்திய வீரர்களுடன் இருக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.