ஹைதராபாத் : இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அதிரடி ஆட்டம் ஆடிய யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 80 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவர் சதம் அடிப்பார் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருந்தது. ஆனால், அவர் ஏமாற்றம் அளித்தார்.
இந்த நிலையில், போட்டிக்கு பின் பேசிய ஜெய்ஸ்வால் சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டதாக நினைக்கிறீர்களா என்ற கேள்விக்கு அலட்டிக் கொள்ளாமல் பதில் அளித்து வியப்பை ஏற்படுத்தினார். சதம் அடிப்பதை விட தான் ஆடும் விதம் சரியாக இருக்கிறதா என்பதே தனக்கு முக்கியம் என்பதை குறிப்பிட்டார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதல் நாள் ஆட்டம் விறுவிறுப்பாக இருந்தது. இங்கிலாந்து அணி 246 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது. அடுத்து இந்திய அணி தன் முதல் இன்னிங்க்ஸ் ஆட்டத்தை துவங்கிய போது துவக்க வீரர் ஜெய்ஸ்வால் தன் அதிரடி ஆட்டத்தால் இங்கிலாந்து அணியை திணற வைத்தார்.
தற்போதைய இங்கிலாந்து அணி அதிரடி ஆட்டம் ஆடுவதில் கைதேர்ந்த அணியாக பார்க்கப்படும் நிலையில், அவர்களையே மிஞ்சினார் ஜெய்ஸ்வால். அவர் 74 பந்துகளில் 80 ரன்கள் குவித்து ஜோ ரூட் வீசிய பந்தில் அடித்து ஆட ஆசைப்பட்டு கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இந்த நிலையில் போட்டிக்கு பின் பேசிய அவர் சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டது குறித்து பேசுகையில், "சதம் அடித்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால், என்னை ஆட்டத்தில் வழிநடத்தும் விஷயம் எப்படி ரன் குவிப்பது என்ற எனது சிந்தனை மற்றும் அதற்கான திட்டம் மட்டுமே. அப்போது நான் நேர்மறையாக சிந்தித்தேன். அணியின் ஸ்கோரை உயர்த்த வேண்டும் என எண்ணினேன். நான் நன்றாகத் தான் அதை செய்தேன். இந்திய மண்ணில் இதுதான் எனது முதல் டெஸ்ட் போட்டி. அணிக்காக சிறப்பாக ஆட வேண்டும் என நினைத்தேன். எனது நாட்டுக்காக ஆடச் செல்லும் போது எனக்கு பெருமையாகவும், கவுரவமாகவும் உள்ளது" என்றார்.