லக்னோ : இங்கிலாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியின் போது விராட் கோலி வீரர்கள் அறையில் கோபமாக காணப்பட்டார்.
இந்தியா - இங்கிலாந்து போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர் சுப்மன் கில் 9 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்ததால், மூன்றாவது வரிசை பேட்ஸ்மேன் விராட் கோலி 5வது ஓவரிலேயே பேட்டிங் ஆட வந்தார்.
அப்போது பிட்ச் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தது. அதனால், நிதானித்து ஆட முடிவு செய்தார் விராட் கோலி. ஆனால், தொடர்ந்து எட்டு பந்துகளில் அவரால் ஒரு ரன் கூட எடுக்க முடியவில்லை. அவர் சந்தித்த ஒன்பதாவது பந்தில் ஷாட் அடிக்க, அது கேட்ச் ஆனது. அதனால், விராட் கோலி டக் அவுட் ஆனார்.

உலகக்கோப்பை வரலாற்றில் இதுவே விராட் கோலியின் முதல் டக் அவுட் ஆகும். அத்துடன், அணி இக்கட்டான நிலையில் இருக்கும் போது டக் அவுட் ஆனதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனால், மைதானத்தை விட்டு வெளியேறும் போது அவசரப்பட்டு ஷாட் ஆடியதை குறித்து தன் மீதே கடும் கோபத்துடன் திட்டிக் கொண்டே தான் அறைக்கு சென்றார்.
அறைக்கு சென்ற பின் இன்னும் கோபத்தின் உச்சிக்கே போன அவர் வீரர்கள் அறையில் தன்னை தானே திட்டிக் கொண்ட அவர், தான் அமர்ந்திருந்த சோபா மீது கைகளால் குத்தி தன் கோபத்தை வெளிப்படுத்தினார். அந்த காட்சி நேரலையில் வெளியானது.
விராட் கோலி டக் அவுட் ஆனதால் இந்திய ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். உலகக்கோப்பை தொடரில் கோலி தொடர்ந்து அரைசதம், சதம் என அடித்து வரும் நிலையில் இந்தப் போட்டியில் சச்சினின் 49 சதம் அடித்த சாதனையை கோலி சமன் செய்வார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அவர் டக் அவுட் ஆனார்.
எனினும், கேப்டன் ரோஹித் சர்மா நிலையாக ஆடி 87 ரன்கள் சேர்த்தார். சூர்யகுமார் யாதவ் பொறுப்பாக ஆடி 49 ரன்கள் சேர்த்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் கை கொடுக்காததால் இந்தியா 50 ஓவர்களில் 229 ரன்கள் மட்டுமே எடுத்தது.