மும்பை : இங்கிலாந்து டெஸ்ட் தொடர் நடந்து வரும் நிலையில் இந்திய அணியில் இருந்து முதல் இரண்டு போட்டிகளில் இருந்து விலகிய விராட் கோலி தற்போது மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போதும் அணிக்கு திரும்புவது சந்தேகம் தான் எனவும், அவர் இதுவரை பிசிசிஐ-யில் யாரையும் தொடர்பு கொள்ளவில்லை எனவும் பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. இதை அடுத்து விராட் கோலி இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்பாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் கடந்த 25ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடருக்கான பயிற்சி முகாமில் கூட பங்கேற்ற விராட் கோலி, முதல் டெஸ்ட் போட்டிக்கு இரு நாட்கள் முன்னதாக தான் தனிப்பட்ட அவசரநிலை காரணமாக முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் இருந்து விலகுவதாக இந்திய அணி நிர்வாகம் மற்றும் பிசிசிஐ-யிடம் தெரிவித்து விட்டு விலகினார்.

பலரும் விராட் கோலி தன் குடும்பத்தினரோடு இந்தியாவில் இருப்பதாக எண்ணிய நிலையில், தற்போது பிசிசிஐ வட்டாரத்தில் அவ்ப்ர் இந்தியாவிலேயே இல்லை என்ற தகவல் கூறப்படுகிறது. அவர் வெளிநாட்டுக்கு சென்று இருப்பதாகவும், எப்போது இந்தியாவுக்கு திரும்புவார் என்பது இந்திய அணி சார்ந்த யாருக்கும் அதிகாரப்பூர்வமாக தெரியாது எனவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே, இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் தோல்வி அடைந்தது. அடுத்து கே எல் ராகுல், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் காயத்தால் விலகினர். இந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கோலி, ராகுல் இல்லாமல் அறிமுக வீரர்கள் ரஜத் படிதார் அல்லது சர்பராஸ் கான் ஆகியோரை வைத்து இந்தியா மிடில் ஆர்டரை சமாளிக்க திட்டமிட்டு இருக்கிறது.
இனி மூன்றாவது டெஸ்ட் மற்றும் அதன் பின் உள்ள டெஸ்ட் போட்டிகளிலும் விராட் கோலி பங்கேற்கவில்லை என்றால் இந்திய அணி, இங்கிலாந்து அணியின் அதிரடி பாணி ஆட்டத்தை எப்படி சமாளிக்கப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக அனுபவ வீரரான விராட் கோலி, கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு பல்வேறு ஆலோசனைகளை கூறி டெஸ்ட் போட்டிகளில் திருப்புமுனையை ஏற்படுத்துவார். அந்த வகையில் ரோஹித் சர்மா தவித்து வருகிறார். விராட் கோலி இல்லாமல் இந்தியா இந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றுமா?