மும்பை : இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் மீதமுள்ள மூன்று போட்டிகளில் விராட் கோலி ஆடுவாரா? இல்லையா? என்ற எதிர்பார்ப்பு பலருக்கும் இருந்தது. இரு தினங்களுக்கு முன்பு கோலி இன்னும் பிசிசிஐ-யை தொடர்பு கொள்ளவில்லை என்று தகவல்கள் வெளியானது.
தற்போது அவர் பிசிசிஐ-யை போன் மூலம் தொடர்பு கொண்டு பேசியதாக கூறப்படுகிறது. அப்போது தான் மீதமுள்ள மூன்று போட்டிகளில் இருந்தும் விலகுவதாக அவர் தெரிவித்து இருக்கிறார். முன்னதாக விராட் கோலி குறைந்த பட்சம் கடைசி டெஸ்ட் போட்டியிலாவது பங்கேற்பார் என பிசிசிஐ மற்றும் இந்திய அணி நிர்வாகம் எதிர்பார்த்த நிலையில் அவர் ஒட்டு மொத்தமாக தொடரில் இருந்து விலகும் முடிவை எடுத்து இருக்கிறார்.

முன்னதாக அவர் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து மட்டுமே விலகி இருந்தார். ஆனால், தற்போது மொத்தமாக விலகி இருக்கிறார். விராட் கோலியின் கிரிக்கெட் கேரியரில் அவர் டெஸ்ட் தொடரில் அறிமுகம் ஆன பின் இதுவரை இந்திய மண்ணில் நடந்த எந்த ஒரு டெஸ்ட் தொடரிலும் முழுமையாக விலகியதே இல்லை. அந்த வகையில் தன் கிரிக்கெட் வாழ்வில் இதுவரை எடுக்காத முடிவை அவர் எடுத்து இருக்கிறார். அவரது குடும்ப சூழ்நிலையே அதற்கு காரணம் என கூறப்படுகிறது.
இந்த முடிவால் அதிர்ந்து போன பிசிசிஐ, உடனடியாக மாற்று வீரராக யாரை தேர்வு செய்யலாம் என்ற விவாதத்தில் உள்ளது. ஏற்கனவே, சர்பராஸ் கான் அணியில் மாற்று வீரராக இடம் பெற்றுள்ளார். ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளில் இருந்து நீக்கப்பட உள்ளார்.
அதே சமயம், கே எல் ராகுல் அணிக்கு திரும்பி விடுவார். ரஜத் படிதார் மிடில் ஆர்டரில் இறங்கும் பட்சத்தில் இப்போதைக்கு அணியில் மாற்று வீரரை தேடத் தேவை இல்லை. ரஜத் படிதார் வேண்டாம் என முடிவு செய்தால் மாற்று வீரரை அணியில் தேர்வு செய்ய வேண்டும். காயத்தில் இருந்து மீண்டு ரவீந்திர ஜடேஜாவும் அணியில் இணைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.