மும்பை : இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் நடைபெற்று வரும் நிலையில், விராட் கோலி மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் ஒட்டுமொத்த டெஸ்ட் தொடரில் இருந்தும் விலகப் போவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வரும் நிலையில், இந்த டெஸ்ட் தொடருக்கான அணியில் விராட் கோலியும் இடம் பெற்று இருந்தார். இந்த தொடருக்கு முன் நடந்த பயிற்சியிலும் அவர் சக இந்திய வீரர்களுடன் கலந்து கொண்டார். ஆனால், முதல் நாள் பயிற்சி முடிந்தவுடன் அவர் விமானம் ஏறி தன் குடும்பத்தினரை சந்திக்க சென்று விட்டார்.

அதன் பின் பிசிசிஐ வெளியிட்ட அறிக்கையில், விராட் கோலி முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என கூறி இருந்தது. அதனால், அனைவரும் விராட் கோலி மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவர் அணிக்கு திரும்பி விடுவார் என எதிர்பார்த்தனர். ஏற்கனவே, இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரில் 1 - 1 என சமநிலையில் இருப்பதால் கோலியின் வருகை இந்திய அணிக்கு பெரிய ஊக்கமாக இருக்கும் என கருதிய நிலையில் குண்டை தூக்கிப் போட்டு இருக்கிறார் விராட் கோலி.
அதாவது, விராட் கோலி குறைந்த பட்சம் நான்காவது டெஸ்ட் போட்டி முடியும் வரை அணிக்கு திரும்ப வாய்ப்பில்லை. ஒருவேளை இந்தியா நான்கு போட்டிகள் முடிவில் டெஸ்ட் தொடரை கைப்பற்றவில்லை என்றால் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி பங்கேற்க வாய்ப்பு உள்ளது. ஆனால், அதுவும் உறுதி செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. விராட் கோலி தன் குடும்பத்தினருக்கான இந்த முடிவை எடுத்துள்ள நிலையில் அதில் வேறு யாரும் விவாதிக்க முடியாது. அதே சமயம் உலகின் முன்னணி பேட்ஸ்மேன் ஆன கோலி இல்லாதது இந்திய டெஸ்ட் அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
கோலி இல்லாத நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு காயத்தால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விலகி இருந்த கே எல் ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா அணிக்கு திரும்ப அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இரண்டாவது டெஸ்ட்டில் ஓய்வு அளிக்கப்பட்ட முகமது சிராஜ், மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது அணியில் இணைய இருக்கிறார்.