ரொம்ப ஓவரா போய்கிட்டு இருக்கு.. இளம் இந்திய வீரருக்கு பில்டப்.. எச்சரித்த சேவாக்
மும்பை : இந்திய அணியின் துவக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் குறித்து ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள் அதிகப்படியாக புகழ்ந்து வரும் நிலையில் அவரை ஜாம்பவான்களோடு ஒப்பிட வேண்டாம் என முன்னாள் துவக்க வீரர் வீரேந்தர் சேவாக் எச்சரித்து இருக்கிறார்.
இந்திய டெஸ்ட் அணியில் ஷிகர் தவானுக்கு பிறகு இடது கை துவக்க வீரராக இடம் பெற்ற ஜெய்ஸ்வால் 6 போட்டிகளிலேயே தன் முத்திரையை பதித்து இருக்கிறார். இரண்டு சதம், இரண்டு அரைசதம் அடித்து இருக்கிறார். அவரது இரண்டு சதத்தில் ஒன்று இரட்டை சதம் ஆகும். அவரது முதல் தர பேட்டிங் சராசரி 73ஆக உள்ளது.

இதை அடுத்து பலரும் அதிக சராசரி கொண்டு இருப்பதால் அடுத்த டான் பிராட்மேன், அடுத்த சச்சின் என்றும், துவக்க வீரராக அதிரடி ஆட்டம் ஆடுவதால் வீரேந்தர் சேவாக் எனவும் கூறி புகழாரம் சூட்டி வருகின்றனர். இது குறித்து சேவாக்கிடம் பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்ட போது, "அவர் மிகவும் நல்ல இளம் பேட்ஸ்மேன். ஆனால், மிக சீக்கிரமாக அவரை மற்றவர்களுடன் ஒப்பீடு செய்கிறார்கள்" என கருத்து கூறி இருக்கிறார்.
முன்னதாக இந்திய அணியின் மற்றொரு துவக்க வீரரான கவுதம் கம்பீரும் இதே போல ஜெய்ஸ்வாலை அதிகம் புகழ்வது குறித்து எச்சரித்து இருந்தார். கம்பீர் இது பற்றி பேசுகையில், "அந்த இளைஞரின் சாதனைக்காக நான் வாழ்த்த விரும்புகிறேன், ஆனால், அதைவிட முக்கியமாக, அந்த இளைஞனை விளையாட விடுங்கள் என்று அனைவருக்கும் சொல்ல விரும்புகிறேன். கடந்த காலங்களில் இந்தியாவில் நாம் பார்த்த வகையில், குறிப்பாக ஊடகங்கள், அவர்களை ஹீரோக்கள் போல் காட்டி, அவர்களின் சாதனைகளை மிகைப்படுத்தி பேசும் பழக்கம் உள்ளது. மேலும், அவர்களுக்கு பட்டங்களை கொடுத்து ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறார்கள்" என்று கூறினார்.
மேலும், "எதிர்பார்ப்பின் அழுத்தம் அவர்களை வசமாக சிக்க வைக்கிறது, அதனால், அவர்கள் தங்கள் இயல்பான விளையாட்டை விளையாட முடியாது. எனவே, ஜெய்ஸ்வால் தனது கிரிக்கெட்டை அனுபவித்து ஆட விடுங்கள்" என்று கம்பீர் கூறி இருந்தார்.


Click it and Unblock the Notifications