லக்னோ : இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆட்டமிழந்து சென்ற போது மொத்த மைதானமும் எழுந்து நின்று கை தட்டி அவரை பாராட்டியது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்தியா துவக்கத்திலேயே மூன்று விக்கெட்களை இழந்த நிலையில், கேப்டனாக பொறுப்பாக ஆடிய ரோஹித் சர்மா அரைசதம் கடந்து 87 ரன்கள் குவித்தார்.
2023 உலகக்கோப்பை தொடரில் இதுவரை இந்தியா முதலில் பேட்டிங் செய்யவே இல்லை. இந்த நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் டாஸில் தோல்வி அடைந்து இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.

துவக்க வீரர் சுப்மன் கில் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். ஒட்டுமொத்த ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடர்களில் இதுவே விராட் கோலியின் முதல் டக் அவுட் ஆகும். அடுத்து ஸ்ரேயாஸ் ஐயர் 16 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்தியா 40 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து மோசமான நிலையில் இருந்தது. அப்போது கேப்டன் ரோஹித் சர்மா தன் அதிரடி வேகத்தை குறைத்து கே எல் ராகுலுடன் இணைந்து கூட்டணி அமைத்து ஆடினார். இருவரும் 91 ரன்கள் சேர்த்த நிலையில் ராகுல் 39 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.
அதன் பின்னும் களத்தில் நின்ற ரோஹித் சர்மா 87 ரன்கள் குவித்த நிலையில் அதில் ரஷித் பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மோசமான நிலையிலும் 86 ஸ்ட்ரைக் ரேட்டில் ரன் குவித்தார் ரோஹித். 101 பந்துகளில் 87 ரன்கள் சேர்த்து இருந்தார்.
ரோஹித் ஆட்டமிழந்து சென்ற போது மொத்த மைதானமும் எழுந்து நின்று கைதட்டி அவரை பாராட்டியது. இப்படி ஒரு கேப்டன் இன்னிங்க்ஸ் முன் சதம் எல்லாம் ஒன்றுமே இல்லை என ரசிகர்கள் இணையத்தில் அவரை பாராட்டினர்.
அதே சமயம், அவர் இல்லாத நிலையில், இந்திய அணி மோசமான ஸ்கோர் தான் எடுக்கப் போகிறது என்ற சோகத்திலும் இருந்தது. சூர்யகுமார் யாதவ் மட்டுமே அதன் பின் அணியை கரை சேர்க்க தனியாக போராடினார். இந்தியா 50 ஓவர்களில் 229 ரன்கள் சேர்த்தது. இந்தியா 200 ரன்கள் என்ற கண்ணியமான ஸ்கோரை எட்டவே ரோஹித் எடுத்த 87 ரன்கள் தான் காரணம். சூர்யகுமார் 49 ரன்கள் எடுத்து உதவினார்.
இந்தப் போட்டியில் அடுத்து ஆடிய இங்கிலாந்து அணி 129 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆகி 100 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.