ராஜ்கோட் : இந்திய அணியின் முன்னணி சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பாதியில் விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக ஃபீல்டிங் செய்ய மட்டுமே இந்திய அணி மாற்று வீரரை பயன்படுத்த முடியும் என்ற நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதனால், இந்திய அணியின் பந்துவீச்சில் குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது.
ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் ஐந்து பந்துவீச்சாளர்கள் இடம் பெற்று இருந்தனர். அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவங்கதேசம் என மூன்று சுழற் பந்துவீச்சாளர்களும், பும்ரா, முகமது சிராஜ் என இரண்டு வேகப் பந்துவீச்சாளர்களும் அணியில் இடம் பெற்று இருந்த நிலையில், அஸ்வின் பாதி போட்டியுடன் விலகி இருக்கிறார்.

தனது தாயை மருத்துவமனையில் அனுமதித்து இருப்பதால் அஸ்வின் சென்னை திரும்பி இருக்கிறார். இந்த நிலையில், இந்திய அணி நான்கு பந்துவீச்சாளர்களுடன் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி இருக்கிறது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. முதல் இன்னிங்ஸில் மட்டுமே 8 விக்கெட்கள் கையில் வைத்திருக்கும் இங்கிலாந்து அணியை வெறும் 4 பந்துவீச்சாளர்களை வைத்துக் கொண்டு இந்திய அணி சமாளிப்பது கடினம்.
பொதுவாக குறைவாக ரன் எடுக்கப்படும் போட்டிகளில் நான்கு பந்துவீச்சாளர்களே போதுமான ஓவர்களை வீசி விக்கெட்களை வீழ்த்தி விடுவார்கள். உதாரணத்துக்கு கடந்த மாதம் நடைபெற்ற தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் இந்தியா, தென்னாப்பிரிக்கா என இரண்டு அணிகளும் நான்கு பந்துவீச்சாளர்களை மட்டுமே பயன்படுத்தின. சில இன்னிங்ஸ்களில் நான்காவது பந்துவீச்சாளருக்கு மிகக் குறைந்த ஓவர்களே அளிக்கப்பட்டன. அதற்கு காரணம், குறைவான ஸ்கோர் எடுக்கப்பட்டது தான்.
ஆனால், தற்போது நடைபெற்று வரும் ராஜ்கோட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்கள் குவித்துள்ள நிலையில், இங்கிலாந்து அணி அதையும் தாண்டி ரன் குவிக்க வெறி கொண்டு பேட்டிங் செய்து வருகிறது. துவக்க வீரர் பென் டக்கெட் 118 பந்துகளில் 138 ரன்கள் குவித்து களத்தில் இருக்கிறார். இந்த நிலையில், நான்கு பந்துவீச்சாளர்களை மட்டும் பயன்படுத்துவது பந்துவீச்சாளர்களை சோர்வடைய வைத்து விடும்.
தற்போதைய இங்கிலாந்து அணி அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட்டு எதிரணி பந்துவீச்சாளர்களை நிலைகுலைய வைப்பதை அடிப்படை திட்டமாகவே வைத்து ஆடுகிறார்கள். விக்கெட்டும் கிடைக்காமல், ரன்களை கொடுத்துக் கொண்டே இருந்தால் பந்துவீச்சாளர்கள் சோர்வடைவார்கள். எனவே, இந்திய அணி ஐந்தாவதாக பகுதி நேர பந்துவீச்சாளரை பயன்படுத்தி முக்கிய பந்துவீச்சாளர்களுக்கு கூடுதல் ஓய்வு தர வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
நேற்று நள்ளிரவு நேரத்தில் தான் அஸ்வின் சென்னை திரும்பப் போவது குறித்து கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு தெரிய வந்திருந்த நிலையில், இரவில் ஐந்தாவது பந்துவீச்சாளராக யாரை பயன்படுத்தலாம் என்ற விவாதம் எழுந்திருக்கும். மூன்று வீரர்களை மட்டுமே இந்திய அணி ஐந்தாவது பந்துவீச்சாளராக பயன்படுத்த முடியும். அது சுப்மன் கில், ரோஹித் சர்மா மற்றும் சர்பராஸ் கான். ரோஹித் சர்மா பந்து வீச வாய்ப்பு குறைவு தான். சுப்மன் கில்லுக்கு அதிக வாய்ப்பு உள்ளது.