லக்னோ : இங்கிலாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியின் போது இந்திய வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து களத்துக்கு வந்தனர்.
முன்னாள் இந்திய அணி கேப்டனும், சுழற் பந்துவீச்சு ஜாம்பவானுமான பிஷன் சிங் பேடி மறைவை ஒட்டியே இந்திய வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து ஆட வந்ததாக பிசிசிஐ ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.
கடந்த அக்டோபர் 23-ம் தேதி டெல்லியில் வயது மூப்பு காரணமாக பிஷன் சிங் பேடி காலமானார். அவர் இந்தியாவுக்காக 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார், 22 டெஸ்ட் போட்டிகளுக்கு இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டவர், அவர் கேப்டன்சியில் தான் இந்தியா வெளிநாட்டில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி கிரிக்கெட் உலகை திரும்பி பார்க்க வைத்தது.

சுழற் பந்துவீச்சு ஜாம்பவானான பிஷன் சங் பேடி 266 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். அவர் பந்து வீச ஓடி வருவதும், பந்தை கையில் இருந்து வெளிப்படுத்துவதும் 'கவிதை' என்று கிரிக்கெட் வர்ணனையாளர்களால் பாராட்டப்பட்டது. அவரது காலத்தில் கிரிக்கெட் உலகின் சிறந்த இடது கை ஆர்த்தடாக்ஸ் பந்து வீச்சாளராக இருந்தார். ஓய்வு பெற்ற பின் பிஷன் சிங் பேடி வெளிப்படையாக விமர்சனங்களை முன் வைப்பதில் பெயர் பெற்றவராக இருந்தார்.
அவரது இறப்புக்கு வீரேந்தர் சேவாக், ஆஷிஷ் நெஹ்ரா, ஜாகிர் கான், சுனில் கவாஸ்கர் உள்ளிட்ட பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், பிசிசிஐ அதிகாரிகள் உள்ளிட்டோர் நேரில் சென்று மரியாதை செலுத்தினர். முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மாத்யூ ஹைடன் தனக்கு ஸ்பின் பந்துவீச்சை எதிர்கொள்ள ஆலோசனை கூறியவர் பிஷன் சிங் பேடி தான் என நினைவு கூர்ந்து இருந்தார்.
அவரது மறைவை நினைவு கூறும் வகையில் இந்திய அணி வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து ஆடினர். இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.